திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் - 27ஆம் தேதி கஜவாகனம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8.30 மணிக்கு விருட்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நட
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8.30 மணிக்கு விருட்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் விழா பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. தினமும் பத்மாவதி தாயார் வாகன வீதி உலா நடக்கிறது. நிறைவு நாளான டிசம்பர் மாதம் 1ஆம் தேதி காலை கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் தாயாரின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கு முன்பு திருச்சானூர் பத்மாவதி தாயாரை வணங்கிய பின்பு தான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக பக்தர்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் திருச்சானூர் அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவடைய உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இரவு 8 மணிக்குள் வாகன சேவை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அரை மணிநேரத்துக்கு முன்பாகவே இரவு 7.30 மணிக்கு வாகன சேவை தொடங்கி இரவு 11 மணிவரை நடக்கிறது. முதல்நாளான இன்று இரவில் சின்ன சேஷ வாகன சேவை நடைபெறும். இதனை தொடர்ந்து 24ஆம் தேதி காலை பெரிய சேஷ வாகன சேவையும், இரவு அன்ன வாகன சேவையும், 25ஆம் தேதி காலை முத்து பல்லக்கு, இரவு சிம்ம வாகனம், 26ஆம் தேதி காலை கற்பக விருட்ச வாகனம், இரவு ஹனுமன் வாகனம், 27ஆம் தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகனம், 28ஆம் தேதி காலை சர்வ பூபால வாகனம், மாலை தங்க ரத உற்சவம், இரவு கருட வாகனம், 29ஆம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திரபிரபை, 30ஆம் தேதி காலை தேர்த்திருவிழா, இரவு குதிரை வாகன சேவைகள் நடைபெற உள்ளன.
நிறைவு நாளான டிசம்பர் மாதம் 1ஆம் தேதி காலை கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் தாயாரின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் அன்றிரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. பிரம்மோற்சவத்தையொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருச்சானூரிலிருந்து திருப்பதி வரை அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.