For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த சுப்ரமணியர் - அரோகாரா முழக்கமிட்ட பக்தர்கள்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. கடற்கரையில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

கந்த சஷ்டி விழா ஐப்பசி அமாவாசைக்கு மறுதினம் பிரதமை துவங்கி சஷ்டி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கினார்.

Tiruchendur lakhs of devotees throng to witness Soorasamharam

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.

தீபாராதனைக்கு பின் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபதுமன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலையில் கோவில் கடற்கரைக்கு வந்து முருகனை எதிர்பார்த்து காத்திருந்தான்.

Tiruchendur lakhs of devotees throng to witness Soorasamharam

வேல் ஏந்தி வந்த முருகன்

சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகளை அணிந்து, சிறப்பு அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபதுமன் உள்ளிட்ட அசுரர்கள் வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டு வந்தார். முருகனின் வருகையை எதிர்பார்த்து கடற்கரையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை கண்டதும் பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பினர்.

யானை முகன் தாரகாசூர வதம்

சூரபதுமனின் தம்பியும், யானைமுகம் கொண்டவனுமாகிய தாரகாசூரன் முதலில் தனது பரிவாரங்களுடன் தலையை ஆட்டியபடி முருக பெருமானை நோக்கி போர் புரிய சுற்றி வந்தான். தாரகாசூரனை பார்த்த முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்து அவனது தலையை கொய்தார்.

சிங்கமுகாசூரன் வதம்

சூரபத்மனின் மற்றொரு தம்பியான சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசூரன் தலையை ஆட்டியபடி வந்தான். முருக பெருமானை வலம் இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகன் தனது வேலால் வதம் செய்தார். சகோதரர்கள் வீழ்ந்ததை தொடர்ந்து சூரபதுமன் போரிட வந்தான். ஆனால் அவன் நேரடியாக போரிடவில்லை.

சூரசம்ஹாரம்

சூரன் மாய வடிவெடுத்து முருகனுக்கு போக்கு காட்டினான். கடலானான், மரமானான். முருகனின் வேலிடம் இருந்து அவன் தப்ப முடியுமா? மாமரமாக வடிவமெடுத்து வந்த சூரபத்மனை இரண்டாக பிளந்து சம்ஹாரம் செய்தார். இந்த காட்சியை கண்டு, கடற்கரையில் கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.

அசுரனுக்கு அருளிய சுப்ரமணியர்

வதம் செய்த சூரனை தன்னுடன் சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஆட்கொண்டார். சிங்க முகாசூரன் உமையம்மையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான். தன்னை எதிர்த்து போரிட்ட அசுரர்களை ஆட்கொண்ட தலம் இந்த திருச்செந்தூர்.

தலையா கடல் அலையா

சூரசம்ஹாரம் நிகழ்வினைக் காண கடற்கரையில் கூடிய கூட்டம் தலையா? கடல் அலையா? என்ற வியப்பை ஏற்படுத்தியது. தமிழக அமைச்சர்களும் திருச்செந்தூருக்கு வந்திருந்தனர். ஏழாம் நாள் திருவிழாவான நாளை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை திருமணம் முடித்த முருகன் திருத்தணியில் சினம் தணிந்து தணிகை வேலாக வள்ளியம்மையை மணம் செய்கிறார். திருச்செந்தூரில் மட்டுமல்லாது திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, சோலைமலை, சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் உள்ளிட்ட முருகப்பெருமானின் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tiruchendur in Thoothukudi district on Tuesday to witness the soorasamharam highlight event of the six day Kanda sashti festival at Sri Subramanyaswamy temple there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X