மாசித்திருவிழா கோலாகலம் - திருச்செந்தூர் திருவெற்றியூரில் தேரோட்டம் திருக்கல்யாணம்
சென்னை: மாசி மாதம் மகத்துவம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் மாசி பவுர்ணமி நாளில் தமிழகம் முழுவதும் பல ஆலயங்களில் தேரோட்டம், தெப்ப உற்சவங்கள் நடைபெறும். இந்த ஆண்டு மாசித்திருவிழா திருச்செந்தூரில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. நேற்று மாலை கொடிப்பட்டத்தை சின்ன சுப்பிரமணியன் அய்யர் கையில் ஏந்தியவாறு, தெய்வானை யானை மீது அமர்ந்து, எட்டு வீதிகளிலும் வலம் வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலை சென்றடைந்தார்.
இன்று காலையில் கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
29.02.2020 இரவு சுவாமி சிங்ககேடய சப்பரம் அம்மன் சின்ன பல்லக்கில் வலம் வருகிறார். 01.03.2020 மாலை சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனம்,அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் உலா வருகின்றனர். 02.03.2020 மாலை சுவாமி வெள்ளியானை வாகனம், அம்மன் வெள்ளிசரப வாகனத்தில் உலா வருகின்றனர். 03.03.2020 மாலை குடவரை வாயில் தீபாராதனை சுவாமி அம்மன் தங்கமயில் வாகனத்தில் உலா வருகின்றனர். 04.03.2020- இரவு சுவாமி வெள்ளித்தேர், அம்மன் இந்திர விமானத்தில் உலா வருகின்றனர்.
சிவப்பு சாத்தி பச்சை சாத்தி
05.03.2020 காலை அருள்மிகு சண்முகப்பெருமான் உருகு சட்ட சேவை மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி சிவப்பு நிற மலர்களில் சுமாமியும் அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருப்பார்கள். 06.03.2020 அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி, சுவாமியும் அம்மனும் வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வலம் வருவார்கள். பகல் 11.30 மணிக்கு பச்சை சாத்தி சண்முகப்பெருமான் உலா வருவார். 10ஆம் திருநாளான வருகிற 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
திருவொற்றியூரில் திருக்கல்யாணம்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா நாளை சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாசி பிரம்மோற்சவ நாட்களில் உற்சவர் சந்திரசேகரர் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, யானை, புஷ்ப பல்லாக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதி உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேரோட்டம் மார்ச் மாதம் 6 தேதி நடைபெறுகிறது. 8ஆம் தேதி காலை திருக்கல்யாணம், அன்று மதியம் 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு மகிழடி சேவை போன்றவை நடைபெறும். விழாவில் 10-ந்தேதி இரவு தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவம் 18 திருநடனத்துடன் விழா நிறைவு பெறுகிறது.