திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா: சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி அருள்பாலித்த சண்முகர்
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழாவை முன்னிட்டு சண்முகர் சிவப்பு சாத்தியும், வெள்ளை சாத்தியும் பச்சை சாத்தியும், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழாவின் எட்டாம் திருநாளன்று சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கொரோனா காலமாக இருப்பதால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா கடந்த 6ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏழாம் திருநாளன்று சண்முகம் சிவப்பு சாத்தி கோலத்தில் அருள்பாலித்தார். பின்னர் வெள்ளை சாத்தியும்,எட்டாம் திருநாளன்று பச்சை சாத்தியும் எழுந்தருளுவது மரபு.
Guru peyarchi palan 2020: இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு குபேர யோகம் தேடி வரும்
மும்மூர்த்தியான முருகன்
திருச்செந்தூரில் முருகப் பெருமான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும். அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி தேரோட்டங்கள் நடைபெறும்.
சண்முகர் சிவப்பு சாத்தி தரிசனம்
சிவப்பு சாத்தி தேரோட்டத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும். இது ஏழாம் திருநாளன்று நடைபெற்றது. சண்முகர் சிவப்பு நிற பட்டாடை அணிந்து செவ்வரளி, ரோஜா நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரகாரத்தை வலம் வந்தார். சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தின் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
முருகன் வெள்ளை சாத்தி
அதுபோல வெள்ளை சாத்தி ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும். வெள்ளை சாத்தியை கண்டு இறைவான தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எட்டாம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெண்பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்தார் சண்முகர்.
சண்முகர் தரிசனம்
எட்டாம் திருநாளன்று நேற்று காலை 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்த சுவாமி சண்முகருக்கும், வள்ளி-தெய்வானைக்கும் அபிஷேகம், அலங்காரமாகி பகல் 11 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார்.
பச்சை சாத்தி தரிசன பலன்கள்
பச்சை நிறமாக தோற்றமளிக்கும் சண்முகரைப் பார்த்தால் வாழ்வில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும். எனவே பச்சை சாத்திக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுவதுண்டு. சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி மூன்றையும் கண்டு மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றால் எளிதில் முக்தி பெற முடியும் என்று திருச்செந்தூர் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் ஆன்லைனில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி பச்சை சாத்தி வந்த சண்முகரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சப்பரத்தில் உலா வரும் முருகன்
ஆவணி திருவிழாவின் 10ஆம் திருநாளான நாளைய தினம் திருச்செந்தூரில் தேரோட்டம் நடைபெறாது. ஆனால் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் கேடய சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.