திருமலை ஏழுமலையானுக்கு 2 பிரம்மோற்சவம்: திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தாண்டு 2 பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
Recommended Video
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடத்தப்பட உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி 3 ஆண்டுக்கு ஒரு முறை, 2 பிரம்மோற்சவங்கள் நடத்துவது ஐதீகம். கடந்த 2015ஆம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற்றது. இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தலைமையில் அனைத்து துறை தலைமை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிவாச ராஜு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடத்தப்பட உள்ளது.
கருடசேவை
செப்டம்பர் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. கருட சேவை 17ஆம் தேதி இரவு நடத்தப்படுகிறது. 18ஆம் தேதி தங்க ரதம், 20ஆம் தேதி தேர்த் திருவிழா மற்றும் 21ஆம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அக்டோபர் 10-ம் தேதி முதல், 18ம் தேதி வரை 2வதாக நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதில் அக்டோபர் 14ஆம் தேதி கருட சேவை, 17ஆம் தேதி தங்க தேர் ஊர்வலம், 18ஆம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரம்மோற்சவத்தையொட்டி தினந்தோறும் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கும் சுவாமி வீதி உலா நடக்கும். கருட சேவை மட்டும் இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
கடந்தாண்டு பிரம்மோற்சவத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் கழிவறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விஜிலென்ஸ், போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
தெப்பக்குளத்தில் குளிக்கத் தடை
வழக்கமாக பிரம்மோற்சவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் தெப்பக்குளம் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளதால், ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை தெப்பக்குளம் சுத்தம் செய்யும் பணி நடக்கும் என்றும் அவர் கூறினார்.
குவியும் பக்தர்கள்
ஏழுமலையானை தரிசிக்க ரம்ஜான் விடுமுறையிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. மேலும், வெயில் காரணமாக ஆந்திராவில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. எனவே திருமலையில் மீண்டும் கூட்டம் அதிகரித்தது. ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 55 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்தும், மலைப்பாதை வழியாக நடந்து வந்த பக்தர்கள், ரூ. 300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் இலவச தரிசனத்தில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தும் தரிசனம் செய்தனர். 3 கோடி ரூபாய் ஒரே நாளில் உண்டியல் காணிக்கை வந்துள்ளது.