திருமலையில் மலையப்பசுவாமி கருடவாகன சேவை - கொட்டும் மலையில் பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று இரவு தங்கக்கருட வாகனவீதி உலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கொட்டும் மழையில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்க
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா களை கட்டியுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட வாகன சேவை ஐந்தாம் நாளான நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. கருடவாகனத்தில் சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த மலையப்பசுவாமியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொட்டும் மழையிலும் பக்தர்கள் நனைந்தவாறு மலையப்பசுவாமியை தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 30ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை பூக்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. திருமலை பூலோக வைகுண்டமாக காட்சியளிக்கிறது.
புரட்டாசி மாதம் என்பதாலும் நவராத்திரி பண்டிகை விடுமுறை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வார விடுமுறை தினமான புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. மூலவரை தரிசிக்க வந்த பக்தர்கள் பலரும் உற்சவ மூர்த்தியையும் தரிசிக்க திரண்டதால் மாட வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் காணப்பட்டனர்.
மலையப்பசுவாமி
பிரம்மோற்சவம் தொடங்கிய நாள் முதலே தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து மலையப்பசுவாமி அருள்பாலித்து வருகிறார். நேற்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்தனர். அப்போது கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு மோகினி அலங்காரத்தில் தோன்றி மாய வித்தை செய்து அசுரர்களை ஏமாற்றினார். அதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்தின் 5வது நாள் காலை உற்சவத்தில் மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்
சரஸ்வதி பூஜை: மாணிக்க வீணையேந்தும் மகா சரஸ்வதி - எத்தனை கோவில்கள் இருக்கு தெரியுமா
கருட வாகனத்தில் சுவாமி
ஐந்தாம் நாளான நேற்று இரவு 7 மணியில் இருந்து கருடவாகன சேவை தொடங்கியது. இதனை காண மாலை முதலே பக்தர்கள் மாட வீதிகளில் குவிந்தனர். வீதிஉலா புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அடாது மழை பெய்தாலும் விடாது பக்தர்கள் இறைவனை காண காத்திருந்தனர். தீப ஆராதனை காட்டியும் கோவிந்தா முழக்கமிட்டும் வழிபட்டனர். இரவு 12 மணிவரை தங்கக் கருட வாகன சேவை நடந்தது.
லட்சுமி ஆரம் மகர கண்டி
கருட வாகனத்தில் தங்க வைர நகைகள், சகஸ்ர மாலை, லட்சுமி ஆரம், மகர கண்டி, கடிக ஹஸ்தம் உள்ளிட்ட ஆபரண அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி மீது மழை தூறல் விழாமல் இருக்க, கூம்பு வடிவ பாய் குடையாகப் பிடிக்கப்பட்டு கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார். நேற்று ஒரே நாளில் மூன்று லட்சம் பக்தர்கள் சுவாமியையும் உற்சவரையும் தரிசனம் செய்துள்ளதாக திருமலை தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன்
மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், கொடியாகவும் திகழ்பவர். கருடன் பல்வேறு சிறப்புகளை பெற்றவர். திருமாலுக்கு இடையறாது சேவை செய்பவர்களில் முக்கியமானவர் கருடன். விஷ்ணுவிற்கு கருடன் தாசன், நண்பன், வாகனம், ஆசனம், கொடி, மேல்கட்டி மற்றும் விசிறியாய் திகழ்கிறார். கருடன் வேதத்தால் புகழப்பட்டவர். அவரே வேத சொரூபம். மந்திரங்களில் கருட மந்திரம் சிறப்பு வாய்ந்தது. கருட மந்திர ஜபம் வானத்தை தாண்டுவது. ஜலம், நெருப்பு, வாயு ஆகியவற்றில் பயமின்றி நுழைவது. இந்திர ஜாலம் உள்ளிட்ட சித்திகளை தரக்கூடியது.
தோஷங்கள் தீர்க்கும் கருடன்
நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடையவர்கள் கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழையில் உலா வந்த மலையப்பசுவாமி
கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கொட்டும் மழையில் நான்கு மாடவீதிகளில் உலா வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. கருடசேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பிரம்மோற்சவ விழாவின் 6வது நாளான இன்று காலை அனுமந்த வாகன வீதிஉலா வந்தார் மலையப்பசுவாமி. கருடன் பெரிய திருவடி என்றால் அனுமன் சிறிய திருவடி. பெருமாளுக்கு பிடித்தமானவர்கள் கருடனும் அனுமனும் என்பதால்தான் முதல்நாள் இரவில் கருடவாகனத்தில் உலா வரும் மலையப்பசுவாமி ஆறாம் நாள் காலையில் அனுமந்த வாகனத்தில் உலா வருகிறார்.
திருமலையில் குவிந்த பக்தர்கள்
இன்று மாலை தங்கத்தேரோட்டமும் இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது. கருட சேவையை தொடர்ந்து, தங்கத் தேரோட்டமும் மிகவும் விசேஷம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். வாகன சேவையின் முன்பாக பக்தர்கள் புலியாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், காளியாட்டம் போன்ற கிராமிய நடனங்களை ஆடியபடி பக்தர்கள் செல்வதைக்காண கண்கோடி வேண்டும்.