திருப்பதி பிரம்மோற்சவம் 2020: ஏழுமலையான் ஏகாந்த சேவை - மாட வீதிகளில் வாகன வீதி உலா இல்லை
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விரைவில் தொடங்கவுள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் ஆழ்வார் திருமஞ்சனம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசித்திப் பெற்ற புரட்டாசி மாத பிரம்மோற்சவம் வரும் 19 ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி வரும் 15ஆம் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 15 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெருமாளை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசியில் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் புகழ்பெற்றது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள்.
பிரம்மோற்சவம் நடைபெறும் 10 நாள்களும் திருப்பதி களைகட்டியிருக்கும். தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி அருள்பாலிப்பார். இந்த ஆண்டு 19 செப்டம்பர் 2020 முதல் 27 செப்டம்பர் 2020 வரை பிரம்மோற்சவம் நடைபெறும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏகாந்தமாக பெருமாள் வலம் வரப்போகிறார்.
திமுக தீர்மானம் இருக்கட்டும்... 2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி என்பதே மக்களின் தீர்மானம் - ஜெயக்குமார்
ஏழுமலையான் கோவில்
திருமலையில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, ஆனி வார ஆஸ்தானம், யுகாதி பண்டிகை, வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்கிழமைகளில், ஏழுமலையான் கருவறை முதல் கோவில் முன் வாசல் வரை சுத்தம் செய்யும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும்.
பிரம்மோற்சவம் ஆழ்வார் திருமஞ்சனம்
மூலவர் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கல் மண்டபங்கள், தங்க கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களும், தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கட்டி கற்பூரம், மூலிகை திரவியங்கள் கொண்ட கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்படும். பின்னர் மூலவர் மீது சாத்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டு நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படும்.
ஆழ்வார் திருமஞ்சனத்தில் பக்தர்கள் பங்கேற்க முடியது
இந்த ஆண்டு பிரம்மோற்சவம் மற்றும் ஆழ்வார் திருமஞ்சனம் ஆகிய வைபவங்களில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. எனினும் வழக்கமான சாமி தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏகாந்தமாக பெருமாள் சேவை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 19ஆம் தேதியில் இருந்து 27 வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவவிழா நடக்கிறது. கொரோனா பரவலால் விழாவில் பங்கேற்று, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை, கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. அதேபோல் காலை, மாலை வாகன சேவை நான்கு மாடவீதிகளில் நடக்காது. கோவில் உள்ளேயே வாகன சேவை நடக்கிறது. அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
அக்டோபரில் நவராத்திரி பிரம்மோற்சவம்
திருமலையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவவிழா இந்த ஆண்டு வருகிற அக்டோபர் மாதம் 16ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிலும் வாகன சேவை நான்கு மாடவீதிகளில் நடக்காது. கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
கொரோனா பரவல் காரணமாக, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 300 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், 300 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் ஒருநாளைக்கு 10 ஆயிரம் பேர் வீதம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.