நவராத்திரி பிரம்மோற்சவம் 2018: தங்கக் கருடவாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமி
திருமலை ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் மலையப்பசுவாமியை தரிசனம் செய்தனர்.
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா களை கட்டியுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. கருடவாகனத்தில் சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த மலையப்பசுவாமியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம் மோற்சவம் கடந்த 10ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை பூக்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. திருமலை பூலோக சொர்க்கமாக காட்சியளிக்கிறது.
புரட்டாசி மாதம் என்பதாலும் நவராத்திரி பண்டிகை விடுமுறை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வார விடுமுறை தினமான புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மூலவரை தரிசிக்க வந்த பக்தர்கள் பலரும் உற்சவ மூர்த்தியையும் தரிசிக்க திரண்டதால் மாட வீதிகளில் வழக்கத்தை விட அதிக பக்தர்கள் காணப்பட்டனர்.
மோகினியாக மாறிய மலையப்பசுவாமி
ஞாயிறன்று காலையில் மோகினி அலங்காரத்தில் மலையப்பசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்தனர். அப்போது கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு மோகினி அலங்காரத்தில் தோன்றி மாய வித்தை செய்து அசுரர்களை ஏமாற்றினார். அதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்தின் 5வது நாள் உற்சவத்தில் மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்
கருடவாகனசேவை தரிசனம்
பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான தங்க கருட வாகன சேவை நேற்றிரவு நடைபெற்றது. கருட சேவையின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக்கொடுத்த துளசி மாலை மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாலையுடன் மூல விக்ரக மூர்த்தி அணிந்திருக்கும் லட்சுமிஹாரம், தங்க சங்கிலி, மகர கண்டி போன்ற நகைகளை அணிந்து மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். நான்கு மாடவீதியில் 2 லட்சம் பக்தர்கள் கருட சேவையை தரிசனம் செய்தனர். கோவிந்தா, கோவிந்தா என்று விண்ணதிர பக்தி முழக்கத்துடன் தீபாராதனை காட்டி சுவாமியை தரிசனம் செய்தனர்.
பெரிய திருவடி கருடன்
பெருமாளின் வாகனம் கருடன், பெரிய திருவடி என்று பக்தர்களால் போற்றப்படுகிறார். பெருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. எனவேதான் இதனைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர்.
தோஷங்கள் தீர்க்கும் கருடன்
நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடையவர்கள் கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழுமலையானை சுமந்த அனுமான்
இன்று காலையில் சிறிய திருவடியான அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்தார். இன்று மாலை தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் நாச்சியார்களுடன் ஏழுமலையான் எழுந்தருளி வலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து கஜ வாகனம் எனும் தங்க யானை வாகனத்தில் பவனி வருகிறார். நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையை தொடர்ந்து, தங்கத் தேரோட்டமும் மிகவும் விசேஷம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
வாகன சேவையின் முன்பாக பக்தர்கள் புலியாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், காளியாட்டம் போன்ற கிராமிய நடனங்களை ஆடினர்.