திருமலையில் வைகுண்ட ஏகாதாசி விழா - ஒரு மாதத்திற்கு இனி திருப்பாவை ஒலிக்கும்
திருமலையில் வைகுண்ட ஏகாதசி நள்ளிரவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. மார்கழி மாதத்தை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு சுப்ரபாதம் ரத்து செய்யப்பட்டு திருப்பாவை ஒலிக்கும்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 18, 19ம் தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனத்தையொட்டி இன்று முதல் 19ம் தேதி வரை கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதலில் குறைந்த எண்ணிக்கையில் மிக முக்கியமான வி.ஐ.பி. பக்தர்கள் புரோட்டோக்கால் தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் அதிகாலை 3 மணிவரை தரிசனம் செய்யலாம். இதையடுத்து அதிகாலை 5 மணியளவில் சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை வழிபட இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
18ம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வைகுண்ட ஏகாதசியையொட்டி தங்க ரதத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 19ம் தேதி துவாதசியையொட்டி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
18, 19ம் தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். ஏழுமலையானை வழிபட மொத்தம் 44 மணிநேரம் இலவச தரிசன பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனத்தையொட்டி இன்று முதல் 19ம் தேதி வரை கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கோயில் அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார்.
திருமலையில் திருப்பாவை
திருப்பதி ஏழுமையான் கோவிலில் தினமும் அதிகாலை 2.30 மணியில் இருந்து3.30மணிவரை சுப்ரபாதசேவை நடைபெறும். மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதசேவை ரத்து செய்யப்படும். இந்த ஆண்டு தினமும் நடந்து வந்தசுப்ரபாதசேவை 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக திருப்பாவை பாசுரம் பாடப்படுகிறது.
ஹெல்மெட் கட்டாயம்
ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பைக்கில் வரும் பக்தர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். இவை இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. அவர்கள் அலிபிரியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு பஸ்சில்தான் செல்ல வேண்டும் என்று தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.