திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் புக்கிங் ஆரம்பம் - அவசியம் இதை ஃபாலோ பண்ணுங்க
திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று முதல் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 11 முதல் பொது மக்கள் உள்பட அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைன் தரிசன புக்கிங் ஆரம்பமாகியுள்
சென்னை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் புக்கிங் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. 11ஆம் முதல் தரிசனம் செய்ய பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் தொற்று எதுவும் இல்லை
என்று உறுதி அளித்த பின்னரே ஆன்லைன் டிக்கெட்டில் புக் செய்ய முடியும். சுவாமி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி உள்ளது புஷ்கரணியில் குளிக்கவோ, அறைகளில் தங்கவோ யாருக்கும் அனுமதி இல்லை.
கடந்த ஆண்டு சீனாவில் பரவிய வைரஸ் மார்ச் முதல் இந்தியாவிற்கும் படையெடுக்கவே, மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊராடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில், கோயில், பள்ளிவாசல், தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.
அனைத்து கோயில்களிலும் அர்ச்சகர்கள் மூலம் பூஜை நடந்தது. பல திருவிழாக்கள் பக்தர்கள் வராமலேயே கோவிலுக்கு மட்டும் நடைபெற்றன. சுவாமிகளை ஆன்லைன் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த 75 நாட்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஒரு சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு இன்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு
பக்தர்கள் தரிசனம்
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் 78 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயில் ஊழியர்களுக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களும் 11ஆம் தேதி முதல் வெளியூர் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.
6500 பக்தர்கள் அனுமதி
கொரோனா காலத்திற்கு முன்பு வரை தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருவார்கள். பாதையாத்திரையாகவும் பேருந்து மூலமும் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு சில நாட்கள் தங்கி இருந்து அருகில் இருக்கும் கோவில்களிலும் தரிசனம் செய்வார்கள். இப்போது 6500 பக்தர்கள் மட்டுமே ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஒரு மணிநேரத்திற்கு 500 பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.
குழந்தைகளுக்கு அனுமதியில்லை
தற்போதுள்ள சூழலில் திருப்பதி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பின்பற்றவேண்டிய முக்கிய விதிமுறைகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தினமும் காலை 6.30 முதல் மாலை 7.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
அரசு வழிகாட்டுதல்களின்படி 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை.
ஏழுமலையான் தரிசன டிக்கெட்
ஜூன் 10ஆம் தேதி உள்ளூர் மக்கள் 500 பேருக்கு குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் பெறுவதற்கான டோக்கன் திருமலா கவுண்டரில் வழங்கப்படும். ஜூன் 11ஆம் தேதி முதல் 3,000 பேருக்கு ஆன்லைனில் 300 ரூபாய்க்கான தரிசன டிக்கெட் வழங்கப்படும். இதற்கான புக்கிங் இன்ற முதல் தொடங்கியுள்ளது. கிராமப்புறங்களில் இருந்து வரும் பக்தர்களும் கட்டாயம் ஆன்லைனில் புக் செய்யவேண்டும். இவர்கள் புக் செய்ய உதவும் வகையில் தன்னார்வலர்களை இணைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அலிபிரி மலைப்பாதை திறப்பு
தினமும் 3,000 சர்வ தர்சன டிக்கெட்களும் திருப்பதியில் வழங்கப்படும். விஐபி பிரேக் தரிசனம் ஜூன் 11ஆம் தேதி முதல் தொடங்கப்படும். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அலிபிரி வழியாக செல்லும் பாதை மட்டும் அனுமதிக்கப்படும். ஸ்ரீவாரி மெட்டு பகுதி மூடப்பட்டிருக்கும். 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இரண்டு மலைப்பாதைகளிலும் செல்ல காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். அலிபிரி சுங்கச்சாவடி அருகே ஒவ்வொரு பக்தர்களுக்கும் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டு வாகனங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு சானிடைசர் வழங்கப்படும்.
திருமண மண்டபங்கள்
மூலவர் தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும். சுவாமி புஷ்கரினி மூடப்பட்டிருக்கும். தீர்த்தம் வழங்குவதும் சடாரி வைக்கப்படுவதற்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உண்டியல் துணி மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க ஸ்ரீவாரி உண்டியல் அருகே பக்தர்களுக்கு மூலிகை சானிடைசர் வழங்கப்படும். 24 மணி நேரத்திற்கு ஒரு அறையில் இரண்டு பக்தர்கள் மட்டுமே தங்கமுடியும். சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகு திருமலை திருமண மண்டபத்தில் 50 பேருக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.
பாதுகாப்பு நடைமுறைகள்
முகக்கவசம் அணிந்துகொள்வது, சானிடைசர் பயன்படுத்துவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட வழிகாட்டல்கள் குறித்து தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்படும். பக்தர்களுடன் தொடர்பில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகள் தயாராக உள்ளது.
மாத்ருஸ்ரீ தரிகொண்டா வேங்கமாம்பா அன்னதான கூடம் மட்டுமே காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படும்.
கொரோனா வைரஸ் பரிசோதனை
தினமும் சுமார் 200 பக்தர்களுக்கு கோவிட்-19 ரேன்டம் பரிசோதனை செய்யப்படும். கோவிட்-19 பரிசோதனைகளுக்கான சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவுகளில் கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டால் அரசு வழிகாட்டல்களைப் பின்பற்றுவதாக பக்தர்கள் உறுதியளித்து ஆவணத்தில் கையொப்பமிடவேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் தரிசன டிக்கெட் புக் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.