திருமலையில் உகாதி ஆஸ்தானம் களையிழந்தது - கொரோனாவால் பக்தர்கள் இல்லாமல் பஞ்சாங்கம் வாசிப்பு
சார்வரி உகாதி ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. பக்தர்கள் யாரும் இன்றி இந்த ஆண்டு
திருப்பதி : உகாதி பண்டிகை என்றாலே திருமலை ஏழுமலையான் கோவிலில் கூட்டம் களைகட்டும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் உகாதி ஆஸ்தானத்தை களையிழக்கச் செய்து விட்டது. பக்தர்கள் யாருமில்லாமலேயே கோவில் ஊழியர்கள் மட்டுமே இருக்க ஏழுமலையானுக்கு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
தெலுங்கு, கன்னட மக்களின் வருடப்பிறப்பு உகாதி. இந்த ஆண்டு கறுப்பு உகாதியாக களையிழந்து விட்டது. காரணம் கொரோனா வைரஸ்தான். எந்த பண்டிகையும் இப்படி ஆனதில்லை இந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள மக்களை கொரோனா பீதி பிடித்து ஆட்டி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி வழக்கமான உற்சாகமில்லாமல் நடைபெற்றது. கடந்த ஒருவார காலமாகவே திருமலை ஏழுமலையான் கோவில் வெறிச்சோடிதான் காணப்படுகிறது.
கொரோனா நோய் அச்சம் காரணமாக நேற்று குறைந்த ஊழியா்களைக் கொண்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில், ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோயில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவது வழக்கம். இன்று யுகாதி ஆஸ்தானம் எனும் தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
மூலவர் சன்னதி முதல் கொடிமரம், ரங்கநாதர் மண்டபம் உட்பட கோயில் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்தனர். பின்னர் பச்சைக்கற்பூரம், குங்குமம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட மூலிகை பொருட்களை கொண்டு தயாரித்த கலவையை கோயில் சுவற்றில் தெளித்து மூலவருக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலையில் உகாதி ஆஸ்தானம் நடைபெற்றது. தங்க கதவு அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி காலை 6 மணிக்கு விஸ்வ சேனாதிபதியுடன் இணைந்து ஆனந்த நிலையத்தை சுற்றி வலம் வந்து கொலு வைக்கப்பட்டனர் தொடர்ந்து காலை 7 மணி முதல் 9 மணிக்கு இடையே ஆனந்த நிலையம் மற்றும் கொடி மரத்தை சுற்றி ஊர்வலமாக வந்தனர். பின்னர் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு சார்வரி ஆண்டுக்கான வருட பஞ்சாங்கத்தை கோயிலின் அர்ச்சகர்கள் படித்தனர். பக்தர்கள் யாரும் இல்லாமல் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்ற உகாதி பண்டிகை ஏழுமலையான் கோவிலில் வழக்கமான உற்சாகமின்றி நடைபெற்றது.
ஸ்ரீராம நவமி பிரம்மோற்சவம்
திருப்பதியில் உள்ள ராமசந்திர புஷ்கரணி அருகில் உள்ள கோதண்டராமஸ்வாமி கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு திங்கட்கிழமை காலை முதல் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கெரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பிரம்மோற்சவ நாட்களில் மாடவீதியில் நடக்கும் வாகன சேவை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் காலை நடக்கும் தேரோட்டம், நிறைவு நாள் காலை நடக்கும் தீர்த்தவாரி உள்ளிட்டவையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் காலை, இரவு உற்சவமூர்த்திகள் கோயிலுக்குள் மட்டுமே வலம் வருவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்ரீராமநவமியை ஒட்டி நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவத்தையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.