திருமலையில் பக்தர்கள் இல்லாமல் நடந்த வசந்த உற்சவம் - தங்க தேரோட்டம் ரத்து
திருமலை திருப்பதியில் பக்தர்கள் இல்லாமல் வசந்த உற்சவம் நடைபெற்றது. தங்க தேரோட்டத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பக்தர்கள் திருப்பதிக்கு வருவது தட
திருப்பதி: திருமலையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறும். கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட உற்சவ மூர்த்திகளுக்கு, வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுதையொட்டி திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வசந்த உற்சவம் பக்தர்கள் யாருமின்றி நடைபெற்ற நிலையில் தங்க தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது அதற்கு பதிலாக சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருமலையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட, உற்சவ மூர்த்திகளுக்கு, வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. பங்குனி மாதம் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதன்படி, கடந்த சில தினங்களாக திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது.
திருப்பதி மலையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் ஏழுமலையான் கோவில் பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழுமலையான் கோவில் உள்ள சம்பங்கி பிரகார மண்டபத்தில் வசந்த உற்சவம் நடைபெற்றது.
தங்க தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இரண்டாம் நாளான்று சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி எழுந்தருளி கொடிமரத்தை வலம் வந்து கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
வழக்கமாக வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2வது நாளில் தங்க ரத்தில் உற்சவ மூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் பின்புறம் உள்ள வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்று அங்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சாமிக்கு நடைபெற கூடிய உற்சவங்கள் அனைத்தும் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் தனிமையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக தங்கத்தேர் வீதிஉலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
வசந்த உற்சவத்தின் 3வது நாளன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமியும், கோதண்டராமர், சீதா, லட்சுமணர் சமேத ஆஞ்சநேயர், ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
மேலும் வழக்கமாக பங்குனி மாத பவுர்ணமியன்று தேவஸ்தாகம் சார்பில் வனப்பகுதியில் நடத்தப்படும் தும்புரு தீர்த்த உற்சவமும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.