திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா - தேரோட்டம் கோலாகலம்
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த திருத்தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பக்தி பரவரசமடைந்தனர்.
நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் ஆலயம் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களில் ஒன்றாகும். இந்த கோவில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்தேரோட்டம் திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. விழா நாட்களில் காலை, இரவில் சுவாமி-அம்பாள் வீதிஉலா நடந்து வந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமிகள் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: நான்காமிட சுக குருவால் கன்னிக்கு கவலைகள் தீரும்
நெல்லையப்பர் காந்திமதி அம்மன்
திருநெல்வேலியில் உள்ள காந்திமதி சமேத நெல்லையப்பர் கோவில். சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை யும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நான்மறைகளும், சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பின. அதற்காக நான்கு வேதங்களும் சிவபெருமானை வேண்டின. எனவே, வேதங்கள் திருநெல்வேலியில் மூங்கிலாய் இருக்க, இறைவன் லிங்கமாய் அமர்ந்தார் என்பது தலபுராணம் ஆகும்.
12 மாதமும் திருவிழா கோலம்
இந்த ஆலயத்தில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் வசந்த மகோற்சவம், வைகாசியில் விசாகத் திருநாள், ஆனியில் பெருந்தேர்த் திருவிழா, ஆடியில் பூரத்திருவிழா, ஆவணியில் மூலத் திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம் கார்த்திகையில் கார்த்திகை தீபம், சோமவார திருநாள், மார்கழியில் திருவாதிரை விழா, தை மாதத்தில் பூசத் திருவிழா, மாசியில் மகா சிவராத்திரி, பங்குனியில் உத்திரத் திருநாள் வெகு விமரிசையாக நடைபெறும்.
நெல்லையில் விழாக்கோலம்
இந்த ஆண்டின் ஆனித்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தையொட்டி நேற்று நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது. நேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மேள தாளம் முழங்க சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். சுவாமி தங்க ஜரிகையுடன் வெண்பட்டும், அம்பாள் சிவப்பு நிற கரையுடன் மஞ்சள் பட்டும் அணிந்து இருந்தனர். இந்த நிகழ்வினை காண அதிகாலை 4 மணியில் இருந்தே பக்தர்கள் திரண்டனர்.
தேரோட்டத்தில் சிவ பக்தர்கள்
தேரோட்டத்தை காண அதிகாலையில் இருந்தே சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வரத்தொடங்கினர். நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் பக்தர்கள் குவிந்து இருந்தனர். காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா வடம் பிடித்து சுவாமி தேரை இழுத்து தொடங்கி வைத்தார். அப்போது ‘ஓம் நமச்சிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி‘ என்று பக்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ரத வீதிகளில் வலம் வந்த தேர்கள்
அலங்கரிக்கப்பட்ட காந்திமதி யானை தேருக்கு முன்பு சென்றது. பஞ்ச வாத்தியம் முழங்கிக்கொண்டு 60 பேர் தேர் முன்பு ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த திருத்தேரினை கண்ட பக்தர்களை பரவசமடைந்தனர். முன்னதாக விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டன. இறுதியில் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டது. தேர் ஒரே நாளில் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. மாலையில் அனைத்து தேர்களும் நிலைக்கு வந்தன.
நெல்லையில் குவிந்த பக்தர்கள்
தேரோட்டத்தை காண நெல்லையை சுற்றியுள்ள பக்தர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் திருநெல்வேலியில் குவிந்து இருந்தனர். விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.