திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம்: நாக தோஷம் நீக்கும் கருட வாகன சேவை
திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் மலையப்பசுவாமியை கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தருவதாகும். அதனால் தான் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பிரம்மோற்சவ நாட்களில் கருட சேவையை தரிசனம
சென்னை: திருமலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடவாகன சேவை நாளை வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது. மலையப்ப சுவாமியை கருட வாகனத்தில் தரிசிக்க திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கருடவாகன சேவையை தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. நாகதோஷம் தீரும், திருமண வரம் தருவார் ஏழுமலையான் என்பதால் பல லட்சம் பேர் திருப்பதியில் குவிகின்றனர்.
புராண - இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம். பிரம்மோற்சவ நாட்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் 30ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். மறுநாள் 1ஆம் தேதி சின்ன சேஷ வாகனத்திலும் தொடர்ந்து இரவு அன்னவாகனத்திலும் உலா வந்தார் மலையப்பசுவாமி. 2ஆம் தேதி காலையில் சிம்ம வாகனத்தில் நரசிம்ம சுவாமியாக வீதி உலா வந்தார். இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் மலையப்பசுவாமி.
சனிப்பெயர்ச்சி 2020-23: நாக்கில் சனி தனுசு லக்னகாரர்கள் வாக்கில் கவனம்
ஸ்ரீதேவி பூதேவி மலையப்பசுவாமி
இன்று காலையில் கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வலம் வந்தார் மலையப்பசுவாமி. கற்பக மரம் கேட்கும் வரங்களைத் தரும் மரம். இந்த வாகனத்தில் ஏழுமலையான தரிசனம் செய்பவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருவார் மலையப்பசுவாமி. இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
ஆண்டாள் மாலை அலங்காரம்
பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான அக்டோபர் 4ஆம் தேதி மலையப்பசுவாமி மோகினி அவதாரத்தில் அழகாய் அருள்பாலிக்கிறார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டுவஸ்திரம் சூடி எழுந்தருள்கிறார் பெருமாள். மோகினி அவதாரத்தில் வலம்வரும் பெருமாளை தரிசனம் செய்ய வாழ்வில் நன்மை என்னும் அமிர்தம் பொங்கும் என்பது ஐதிகம்.
கருட வாகன சேவை
மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதையொட்டித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பெருமாளே வரமாகக் கேட்டுப் பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதிகம். ருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது.
கருட கொடி
கருடாழ்வார் என்ற கருடன் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். கருடனை `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார் பெருமாள். எனவேதான் பெருமாள் கோவில்களில் கருட கொடி ஏற்றப்படுகிறது.
கருட வாகனம்
திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார்.இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருநாங்கூர்,கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய கோயில்களில் கருட சேவை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
கருடன் சன்னதி
கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியவாறு இருப்பார்.
பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். நாச்சியார் கோவிலில் கல்கருடன் தனி சன்னிதியில் கம்பீரமாக காட்சி தருகிறார்.
திருமண தோஷம் நீங்கும்
சுவாதி நட்சத்திர நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கருடனை வழிபடுவதால் திருமணம் யோகம் மற்றும் வாகன யோகமும் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் பக்தர்கள் திருமாலை மற்ற எல்லா விதமான வாகனங்களில் தரிசிப்பதைக் காட்டிலும் கருட சேவையில் தரிசிப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுவர்.
களத்திர தோஷம் நீங்கும்
நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடையவர்கள் கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். எனவேதான் லட்சக்கணக்கான பக்தர்கள் கருடசேவையில் மலையப்பசுவாமியை தரிசிக்க திருமலையில் குவிந்து வருகின்றனர்.