திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் வரும் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற கருடசேவை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
திருப்பதி: புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முதல் சனிக்கிழமையான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா வரும் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி 24ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவையில் மலையப்ப சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் 5 லட்சம் பேர் திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க் கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஏழுமலையான் கோயிலில் வரும் 30ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை பிரமோற்சவம் நடைபெற உள்ளது.
பிரமோற்சவத்தை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி செவ்வாய்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை சுப்ரபாத சேவை உள்ளிட்ட பூஜைகள் முடிந்ததும், பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும். அன்றைய தினம் மூலவர் ஏழுமலையான் சிலை பட்டு துணியால் மூடப்பட்டு, காலை 6 மணிக்கு கோயில் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கும். தூய்மைப்பணி முடிந்ததும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் மதியம் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். புரட்டாசி மாதம் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் பக்தர்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது அவசியம். இன்று முதல் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் நேற்றிரவு முதலே அலைமோதுகிறது.
பிரம்மோற்சவ முக்கிய நிகழ்வுகள் 2019:
செப்டம்பர் 30 -பிரம்மோற்சவ கொடி ஏற்றுதல் பெரிய சேஷ வாகனம்
அக்டோபர் 1 - காலையில் சின்ன சேஷ வாகனம் , இரவில் ஹம்ச வாகனம்
அக்டோபர் 2 - காலையில் சிம்ம வாகனம் இரவில் முத்துப் பல்லாக்கு
அக்டோபர் 3 - காலையில் கற்பக விருஷப வாகனம் இரவில் சர்வ பூபாள வாகனம்
அக்டோபர் 4 - காலையில் மோகினி அலங்காரம், இரவில் கருட வாகனம்
அக்டோபர் 5 - காலையில் அனுமன் வாகனம் இரவில் தங்க தேரோட்டம்
அக்டோபர் 7 - காலையில் தேரோட்டம், இரவில் குதிரை வாகனம்
அக்டோபர் 8 - காலையில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் முடிகிறது மாலை கொடி இறக்கம்