திருப்பதி பிரம்மோற்சவம்: கருட வாகனத்தில் ஏழுமலையானை தரிசித்தால் புண்ணியம் பெருகும்
கருட சேவை வழிபாடு மிகுந்த புண்ணியத்தை தருவதாகும்.அதனால் தான் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பிரம்மோற்சவ நாட்களில் கருட சேவையை தரிசனம் செய்யவே அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர்.
சென்னை: திருமலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடவாகன சேவை திங்கட்கிழமை நடைபெறுகிறது. பெருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. நாகதோஷம் தீரும், திருமண வரம் தருவார் ஏழுமலையான் என்பதால் பல லட்சம் பேர் திருப்பதியில் குவிகின்றனர்.
மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான திங்கட்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் இறைவன் எழுந்தருகிறார் அன்றிரவு கருடவாகன சேவை நடைபெறுகிறது.
பெருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. எனவேதான் இதனைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிகின்றனர். 5 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏழுமலையான்
திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார்.இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது.
கருட வாகனம்
கருடாழ்வார் என்ற கருடன் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியவாறு இருப்பார்.
கருட வாகன சேவை
பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். நாச்சியார் கோவிலில் கல்கருடன் தனி சன்னிதியில் கம்பீரமாக காட்சி தருகிறார். தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருநாங்கூர்,கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய கோயில்களில் கருட சேவை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
திருமண யோகம்
சுவாதி நட்சத்திர நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கருடனை வழிபடுவதால் திருமணம் யோகம் மற்றும் வாகன யோகமும் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் பக்தர்கள் திருமாலை மற்ற எல்லா விதமான வாகனங்களில் தரிசிப்பதைக் காட்டிலும் கருட சேவையில் தரிசிப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுவர்.
முன்னோர்களின் ஆசி கிடைக்கும்
நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடையவர்கள் கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். என்ன திருப்பதிக்கு கருட சேவை பார்க்க கிளம்பிட்டீங்களா?.