திருப்பதி பிரம்மோற்சவ தோரோட்டம் கோலாகலம் - தீர்த்தவாரியுடன் விழா நிறைவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருத்தேரோட்டம் கோலகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைகிறது. புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் முடிந்த பின்னர் மாலையில் பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.
திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. எட்டாவது நாளான நேற்று காலை, கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேரை வடம்பிடித்த பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கங்களை எழுப்பியபடி, திருத்தேரை வடம்பிடித்து இழுத்து மலையப்ப சுவாமியை தரிசித்தனர்.
அப்போது மாடவீதிகளில் கூடியிருந்தவர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு, உப்பு, மிளகு மற்றும் சில்லரை நாணயங்கள் ஆகியவற்றை திருத்தேர் மீது வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த உற்சவங்களுக்கு திருவாபரண சமர்ப்பணம் நடைபெற்றது. தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருளிய உற்றவர்களுக்கு தீப தூப நைவேத்தியங்கள் நடத்தப்பட்டன. மாட வீதிகளில் பவனிவந்த ரதத்திற்கு முன்பு யானை, குதிரை பரிவட்டங்கள் சென்றன. மேலும் மேளதாள நடன வாத்தியங்களுடன் கலைஞர்கள் நடனம் ஆடியபடி சென்றனர்.
நேற்றிரவு தங்க குதிரை வாகனத்தில் மலையப்பசுவாமி கம்பீரமாக பவனி வந்து அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழா தொடங்கிய நாள் முதல் சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி எட்டாம் நாளான நேற்றிரவு கல்கி அவதாரத்தை நினைவு கூறும் வகையில் குதிரை வாகனத்தில் வலம் வந்தார்.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை கோவில் அருகேயுள்ள புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் என்பதால் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி இரண்டாவது பிரம்மோற்சவம் தொடங்குகிறது.