திருமலை: மலையப்ப சுவாமி சிலையில் சேதம்... ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்படுமா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவராக இருக்கும் மலையப்ப சுவாமி சிலையானது ஐம்பொன்னால் செய்யப்பட்டதாகும்.
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வெங்கடாசலபதி சாமியின் உற்சவரான மலையப்ப சுவாமி சிலையின் தலை மற்றும் உடல் பாகங்கள் பிளவுபட்டு விரிசலடைந்துள்ளதை கண்டு திருப்பதி தேவஸ்தன போர்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த உற்சவர் சிலையானது 600 ஆண்டுகள் பழமையானதாகும்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம் என்று தினந்தோறும் ஆர்ஜித சேவைகளும் வாராந்திர நாட்களில் விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் வருடாந்திர சேவைகள் என பல்வேறு சேவைகள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு தினந்தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த உற்சவர் சிலைகளில் தற்போது தேய்மானம் ஏற்பட்டுள்ளது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கோவில்கள் என்பவை பாரபட்சமில்லாமல் அனைவரும் சென்று கடவுளை வணங்குவதற்காகவே கட்டப்பட்டவையாகும். தவிர்க்க முடியாத காரணங்களினால் கோவிலுக்குள் வர இயலாதவர்களும் சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான், கருவரையில் உள்ள சிலையைப் போல் உற்சவர் சிலைகளை உருவாக்கி, அதனை விஷேச நாட்களிலும், அந்தந்த கோவில் திருவிழா நாட்களிலும், கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் உற்சவர் சாமி சிலையை ஊர்வலமாக எழுந்தருள செய்வார்கள்.
ஐம்பொன்னால் செய்யப்படும் இந்த உற்சவர் என்பவர், ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்ட அனைத்து கோவில்களிலும், கருவரையில் உள்ள மூலவருக்கு உள்ள தெய்வீக சக்தியையும், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாகவே செய்யப்பட்டிருக்கும். இதன் காரணமாகவே கோவில் திருவிழா மற்றும் விஷேச நாட்களில் நடைபெறும் உற்சவர் ஊர்வலத்தை காண கூட்டம் அலைமோதும்.
சில கோவில்களில் உற்சவர் சிலைகள் இருந்தாலும், அவை கருவறையில் உள்ள மூலவர் மாதிரி புகழ்பெறுவது கிடையாது. சில கோவில்களில் உள்ள உற்சவர் சிலைகள் கருவறையில் இருக்கும் மூலவர் சிலையை விட புகழ்வாய்ந்ததாக இருக்கும். இன்னும் சில கோவில்களில் மூலவரைப் போலவே உற்சவரும் அதிக புகழடைந்துவிடும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலும், உற்சவரும் அதே போலவே உலகப் புகழ்பெற்றதாகும். திருப்பதி வெங்கடாசலபதியைக் காண நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்வது போலவே, அங்கு அவ்வப்போது நடைபெறும் உற்சவர் ஊர்வலத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமியை காணவும் கூட்டம் அலை மோதும். அதிலும் பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கானோர் உற்சவரை காண நான்கு மாடவீதிகளிலும் காத்திருப்பதுண்டு.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவராக இருக்கும் மலையப்ப சுவாமி சிலையானது ஐம்பொன்னால் செய்யப்பட்டதாகும். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இச்சிலையானது பிரம்மோற்சவ திருவிழாக்களின் போதும் நான்கு மாடவீதிகளிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக எழுந்தருளுவதுண்டு.
அதே போல், மலையப்ப சுவாமிக்கு தினமும் திருமஞ்சனம் செய்வது, வானகுளியல் செய்து அபிஷேக, தீப தூப ஆராதனைகள் காட்டப்பட்டு, அலங்காரமும் செய்யப்படுகிறது. அதோடு, ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் சகஸ்ர கலச அபிஷேகமும். புதன் கிழமைகளில் வசந்த உற்சவம் உள்ளிட்ட பல சேவைகள் நடத்தப்படுகின்றன. மற்ற இந்து கோவில்களில் எல்லாம் உற்சவர் ஊர்வலம் என்பது மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது விஷேச நாட்களிலோ அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறும். ஆனால், திருப்பதியில் உற்சவரான மலையப்ப சுவாமிக்கு தினமும் அபிஷேகம், ஆராதனை செய்யப்படுவதால், உற்சவரான மலையப்ப சுவாமி சிலை சேதமடைந்துள்ளது.
திருப்பதி வெங்கடாசலபதியான ஸ்ரீவாரி கோவிலின் தலைமை அர்சசகரான வேணுகோபால் தீட்சிதுலு தலைமையிலான அகமா குழுவினர், கோவிலில் இருக்கும் உற்சவரான மலையப்ப சுவாமி சிலையை ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உற்சவரான மலையப்ப சுவாமி சிலையின் தலை உச்சியிலும், அடிப்பகுதியிலும் விரிசல் விட்டுள்ளது கண்டறியப்பட்டது.
சிலையின் கண்கள், முகம், வாய், விரல்கள், இடுப்பு பகுதி, மலையப்ப சுவாமி கையில் ஏந்தியிருக்கும் சங்கு சக்கரம் ஆகிய பகுதிகளிலும் சுருக்கங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சிலை மேலும் சேதமடையாமல் இருக்க உற்சவருக்கு செய்யப்படும் சகஸ்ர கலச அபிஷேகம், நித்திய வசந்த உற்சவம் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என சிலை பாதுகாப்பு குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். கூடவே சில குறிப்பிட்ட ஆர்ஜித சேவைகளையும் நிரந்தரமாக நிறுத்தவும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
மலையப்ப சுவாமி சிலையை பழுது பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெறும் திருப்பதி தேவஸ்தான கூட்டத்தில் அகமா குழுவினரின் பரிந்துரை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.