திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: நாளை கருடவாகன சேவை - டிவியில் தரிசிக்கலாம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏகாந்தமாக பிரம்மோற்சவ விழா நடைபெற்றாலும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளும் பெருமாளை பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு தரிசனம் செய்யலாம். நாளை 20ஆம் தேதி காலை மோகினி அவதாரத்திலும் இரவு கருட வாகன சேவையிலும் காட்சி தருகிறார்
பெருமாள்.
ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம், நவராத்திரி பிரம்மோற்சவ விழா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக மாட வீதிகளில் சாமி ஊர்வலம் நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் தொலைக்காட்சி நேரலையில் சாமியை தரிசனம் செய்தனர்.
நவராத்திரி பிரம்மோற்சவம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் பல்வேறு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலின் ராஜகோபுரம் முற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா 16ஆம் தேதி தொடங்கியது. வரும் 24ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. ஆகமசாஸ்திரங்களின்படி அங்குரார்பன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுவாமி சேனாதிபதியான விஸ்வகேசவர் எழுந்தருளி பிரம்மோற்சவ ஏற்பாடுகளை ஆய்வுசெய்தார்.
திருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை
தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் கல்யாண உற்சவ மண்டபம், ரங்கநாயகர் மண்டபத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார். முதல்நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சுவாமி காட்சி அளித்தார்.
சிம்மவாகனம், முத்துப்பந்தல் வாகனம், கல்ப விருட்ச வாகனங்களில் காட்சி அளித்த மலையப்ப சுவாமி, 20ஆம்தேதி காலை மோகினி அவதாரம், இரவு கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான 24ஆம்தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை பல்லக்கு உற்சவம், திருச்சி உற்சவம், காலை 6 மணி முதல் 9 மணி வரை திருமஞ்சனம், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவத்தின் போது ரூ.300 கட்டண சிறப்பு தரிசன பக்தர்கள் ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்த பக்தர்கள், வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.