கொரோனா பாதிப்பு பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடிய திருமலை ஏழுமலையான் கோவில்
கொரோன வைரஸ் பீதியின் காரணமாக தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றம் திருப்பதி நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியுள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால், பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் நேற்று நண்பகல் முதல் மூடப்பட்டது. தினசரி ஏழுமலையானுக்கு நடக்கும் கைங்கரியங்கள் மட்டும் ஆகம விதிமுறையின் படி எந்தவித குறையும் இல்லாமல் நடைபெறும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றம் திருப்பதி நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. கொரோன வைரஸ் பீதியின் காரணமாக சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் மீண்டும் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.
வைணவ ஆலயங்களில் புகழ்பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் முக்கியமான ஒன்றாகவும் விளங்குவது திருப்பதி வெங்கடாசலபதி கோவில். தினந்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும் பாத யாத்திரையாகவும் வருவதுண்டு. இவர்களில் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் முதல் அறுபதாயிரம் பேர்கள் வரை ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்வதுண்டு.
விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இரண்டு முதல் மூன்று நாட்களை வரை கூட பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் காத்திருந்து ஏழுமலையான தரிசித்துவிட்டு செல்வதுண்டு. இதனால், திருமலை, திருப்பதி நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் அனைத்துமே இருபத்தி நான்கு மணி நேரமும் ஜே ஜே என்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
மலையை மறைக்கும் பக்த வெள்ளம்
திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையம், தங்கும் விடுதிகள், திருமலைக்கு செல்லும் வழியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடி என இருபத்தி நான்கு மணி நேரமும் வாகனங்களின் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். கல்யாணகட்டா எனப்படும் மொட்டை போடும் இடங்களிலும், அன்னதான மையம், வைகுண்டம் காம்ப்ளக்ஸ், நந்தகம் கெஸ்ட் ஹவுஸ் என எங்கு பார்த்தாலும் மலையை மறைத்து பக்தர்களின் தலை தான் தெரியும்.
கொரோனா வைரஸ் தொற்று
இதெல்லாம் கடந்த வாரம் வரைதான். ஆனால், இன்றைக்கோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. திருமலை மற்றம் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் அனைத்துமே ஆள் அரவமில்லாமல் வெறிச்சோடிக்காணப்படுகின்றன. இதெற்கெல்லாம் காரணம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தான் காரணம். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைக்கு சுமார் 150 நாடுகளில் பரவி சுமார் மூன்று லட்சம் பேர்களை தாக்கியதோடு, பத்தாயிரம் பேர்களை வரை பலி வாங்கிவிட்டது. காற்றின் மூலம் பரவுதோடு, நோய் தொற்று உள்ளவர்களை தொடுவதாலும் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதாலும் தற்போது அனைத்து நாடுகளும் உஷாராகி போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரமாக எடுத்து வருகிறது.
கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு
இந்தியாவிலும் இதுவரை சுமார் 234 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 5 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்பதால், மத்திய அரசு அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் மூடிவிட உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் என அனைத்தும் நேற்று முதல் மூடப்பட்டன.
வழிபாட்டு தலங்கள் மூடல்
ஆனாலும், மத்திய அரசின் உத்தரவை மதிக்காமல் சில வழிபாட்டுத் தலங்களுக்கு தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வதந்தி பரவத் தொடங்கியது. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான கோவில் தேவஸ்தான அதிகாரிகள் வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் திருமலைக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதித்துள்ளது.
12 மணி வரை தரிசனம்
வெள்ளிக்கிழமை மற்றும் ஏகாதசி நாளான நேற்று அதிகாலையில் வழக்கம்போல் சுவாமிக்கு சுப்ரபாத சேவை, தோமாலை, அபிஷேகம், அர்ச்சனை என அனைத்து சேவைகளும் நடந்தன. சுவாமிக்க நெய்வேத்தியங்களும் படைக்கப்பட்டன. ஆனால் பக்தர்கள் யாரும் இதில் அனுமதிக்கப்படவில்லை. எனினும் நண்பகல் 12 மணிவரை திருமலையில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த வியாழன்று திருமலைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று இரவு ஏகாந்த சேவைக்கு பின்னர் வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்பட்டது. திருமலைக்கு செல்லும் மலைப்பாதைகளும் மூடப்பட்டு விட்டன. அலிபிரி சோதனைச் சாவடியும் பாதயாத்திரை தொடங்கம் ஸ்ரீவாரி மெட்டு உள்ளிட்ட நடைபாதை மார்க்கங்களும்மூடப்பட்டுள்ளன.
வெறிச்சோடிய கோவில்கள்
இதேபோன்று கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள், திருச்சானூர் பத்மாவதி தாயார், கோதண்டராமர் கோவில்களிலும் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.
கோவிலில் சுவாமிக்கு தினமும் நடைபெறும் அனைத்து ஆராதனைகள், பூஜைகள், வழக்கம் போல் நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். தரிசனத்திற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காரணத்தினால் ஆண்டு முழுவதும் ஜேஜே என்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருமலை, திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் அனைத்துமே களையிழந்து காணப்படுகின்றன.
பக்தர்கள் இல்லாத திருமலை
அதே போல், திருமலையில் அனைத்து தங்கும் விடுதிகள், அன்னதான மையங்கள், கல்யாண கட்டா, என அனைத்து இடங்களும் யாருமில்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. சுமார் 128 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1892ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை 2 நாட்கள் அடைக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு கோவிலை சுத்தம் செய்யும் பணிக்காக ஆறு நாட்கள் பக்தர்களை அனுமதிக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தற்போது மீண்டும் பக்தர்கள் யாருமில்லாமல் திருமலை ஏழுமலையான் கோவில் வெறிச்சோடிக் காணப்படுகிறது.