திருமலையில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாக்கள் - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
திருப்பதியில் ஏகாதசி, துவாதசி 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் திறப்பு
திருப்பதி: ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அலைகடலென பக்தர்கள் திரண்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட அந்த முழக்கத்திற்கு இடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெற்றது. ஞாயிறன்று நள்ளிரவு 12 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட்டு, மார்கழி மாத கைங்கர்யம், பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலில் திருப்பாவை பாசுரம் பாடப்பட்டது. அதைத்தொடர்ந்து தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் ஆகியவை முடிந்ததும் திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை அலங்கரித்து தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருள செய்தனர். கோவில் ஊழியர்கள் தங்களின் தோள்களில் சுமந்தபடி, உற்சவர்களை முதலில் சொர்க்கவாசல் வழியாகக் கொண்டு வந்து, தங்க வாசலில் பக்தர்கள் வழிபடும் வகையில் வைத்தனர். பின்னர் அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிவரை குறைந்த எண்ணிக்கையில் வி.ஐ.பி. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து அதிகாலை 5 மணியில் இருந்து இலவச தரிசனத்தில் சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என விண்ணதிர முழக்கமிட்டவாறே சாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பிறகு சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்படுவது வழக்கம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ளது போன்று ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்து பக்தர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் இரண்டு நாட்கள் மட்டுமே ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவதால் அதிக அளவு பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்படுவதாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
2 நாட்கள் சொர்க்கவாசல்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இதுகுறித்து அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடத்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் எடுக்கும் முடிவே இறுதியானது என தீர்ப்பு வழங்கியிருந்தது. 2 நாட்களுக்கு மட்டும் பக்தர்களை சொர்க்கவாசல் வழியாக அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டதால் இந்த ஆண்டு நேற்றும் இன்றும் மட்டுமே சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
அலங்காரத்தில் மலையப்பசுவாமி
காலை 9 மணியளவில் தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தனர். மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சகஸ்ர தீபலங்கார சேவை நடைபெற்றது.
நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் கூட்டம்
அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத் திருச்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆனது. ரூ.3 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. இன்று துவாதசி விழா நடந்தது. அதையொட்டி அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை கோவிலுக்கு அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதையொட்டி கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.