ஆடிக்கிருத்திகை விழா - திருத்தணியில் காவடியுடன் பக்தர்கள் குவிந்தனர்
திருத்தணி முருகன் கோவிலில், ஆடி அஸ்வினியுடன், ஆடிக்கிருத்திகை விழா, நேற்று துவங்கியது. காவடிகளுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு எற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை: முருகன், கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா நாளை கொண்டாடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுவார்கள். திருத்தணி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்து வருகின்றனர்.
கார்த்திகேயனுக்கு உகந்த நட்சத்திரம் கார்த்திகை. வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் மகா கிருத்திகை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை ஆகிய மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை!
ஆடிக்கிருத்திகை விழா 5ஆம் தேதியான ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 7ஆம் தேதி வரை நடக்கிறது.
ஆடிக்கிருத்திகை விழா அஸ்வினியுடன் நேற்று தொடங்கியது. இன்று ஆடி பரணியும், 5ஆம் தேதி ஆடி கிருத்திகை விழாவும் நடைபெறுகிறது. விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
ஆடிக்கிருத்திகை விழாவை யொட்டி நேற்று காலை முதலே திருத்தணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் காவடி, அலகு குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். அதிகாலை 4 மணியளவில் மூலவர் முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடத்தப் பட்டது. பின்னர் முருகப்பெருமான், வள்ளி-தெய்வாணையுடன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவதற்கு சிறப்பு வசதிகளும், முருக பெருமானை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு தரிசன வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
தலைமுடி காணிக்கை, நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவண பொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்லேறு பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
குற்றங்களை தடுக்க கோவிலின் முக்கிய இடங்களில் சி.சி. டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகராட்சி சார்பில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர், தடையில்லா குடிநீர் வழங்க குளோரின் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளும், 30 நடமாடும் நவீன கழிவறைகளும், அமைக்கப்பட்டு இருக்கிறது.
பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் உட்பட 368 பேருந்துகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வந்தவாசி, செய்யாறு, திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வேலூர், ஆற்காடு, சித்தூர், திருப்பதி ஆகிய இடங்களிலிருந்து திருத்தணிக்கு இயக்கப்படுகின்றது.
இந்த சிறப்பு பஸ்கள் இன்று முதல் 6ஆம்தேதி வரையில் 4 நாட்களிலும் இரவும், பகலும் இயக்கப்பட உள்ளது. திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி மேற்பார்வையில் தக்கார் ஜெய்ஷ்ங்கர், இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சிவாஜி மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதற்காக வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 400 பஸ்கள் இயக்கபடுகிறது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானால் சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, கந்தக் கடவுளை வழிபடுவார்கள் ஆறுபடை வீடுகளிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூரில் பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடுகின்றனர்.
மூன்றாம் படை வீடான பழநியில் பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகக்கடவுளை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். இந்த நாளில் விரதமிருந்து அழகன் முருகனை வணங்கினால், எதிரிகள் தொல்லை ஒழியும். வழக்கில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.