புரட்டாசி சனிக்கிழமை தரிசனம்- வரங்கள் பல அருளும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
சென்னை: மகாபாரதத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜூனனுக்கு அறிவுரை சொன்ன கிருஷ்ணரின் அவதாரமான பார்த்தசாரதியின் கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் ஆலயத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
108 திவ்ய தேசங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயில் 61வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இந்த கோயிலுக்கு பல பெரும் சிறப்புகள் உள்ளன. பிருந்தாரண்ய ஸ்தலம் என்றும், பஞ்ச வீரத்தலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகும்.
இந்த கோயிலில் அமைந்திருக்கும் பார்த்தசாரதியின் திருமுகத்தில் பல தழும்புகள் இருக்கும். அதாவது மகாபாரதப் போரில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்து, போரில் பட்ட விழுப்புண்களின் தழும்புகள் அவை. மேலும் கிருஷ்ண அவதாரங்களில் மீசையுடன் காணப்படும் அவதாரமும் இவர். அர்ஜூனனை பார்த்தா என்று அழைப்பார்கள். தேரோட்டியை சமஸ்கிருதத்தில் சாரதி என்று கூறுவார்கள். எனவே பார்த்தனின் சாரதியாக வந்த இவர் பார்த்தசாரதி என்று அழைக்கப்பட்டார். சாரதிக்குரிய கம்பீரத்தோடு மீசையுடன் அழகாக 9 அடி உயரத்தில் மூலவர் காட்சியளிப்பது இந்த தலத்தில் மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பு.
கோயிலில் அமைந்திருக்கும் மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் சேவை சாதிக்கிறார். பெரும்பாலும் பெருமாள் தனது குடும்பத்தாருடன் காட்சி அளிப்பது மிகவும் அரிதாகும். பார்த்தசாரதி பெருமாளை தியாகபிரம்மம் முத்துசாமி தீட்சிதர், மகாகவி பாரதியார், தியாகராஜ சுவாமிகள், சுவாமி விவேகானந்தர், கணிதமேதை ராமானுஜர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
தல புராணம்
சுமதி ராஜன் என்கின்ற மன்னன் பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களை வழிநடத்திய ஸ்ரீ கிருஷ்ணர் மீது அவனுக்கு மிகுந்த பிரியம் உண்டு. ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் வேண்டும் என்று இறைஞ்சிக் பெருமாளை கேட்டுக் கொண்டான். ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த இடத்திற்கு போக வேண்டுமானால் பல மலைகள், பல காடுகள் தாண்டி செல்ல நேரிடும் என்பதை நினைத்து வருந்தினான்.
சுமதி ராஜனின் கனவில் தோன்றிய பெருமாள் பிருந்தாரண்யம் (திருவல்லிக்கேணி) என்ற துளசிக்காடு (பிருந்தா - துளசி, ஆரண்யம் - காடு) இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வேடத்தில் தான் காட்சி அளிப்பதாக கூறினார். சுமதி ராஜன் இங்கு வந்து பாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை கண் குளிர தரிசனம் செய்தான். பின் கோவிலும் எழுப்பியதாக வரலாறு.
கம்பீரமாய் காட்சி தரும் இறைவன்
ஆலயத்தினை வெளியில் இருந்து பார்க்கும் போதே கம்பீர தோற்றத்துடன் காட்சி தருகிறது. பிரதான கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் ஓங்கி உயர்ந்த கொடிமரம் காட்சியளிக்கிறது. கொடிமரத்தை தரிசித்து விட்டு உள்ளே சென்றால்
திரண்ட புஜங்களோடு வலது கையில் சங்கு ஏந்தி, இடது கை பாதத்தைச் சுட்டிக்காட்ட, உயரமாய் அகலமாய், கம்பீரனாய் பெரும் விழிகளோடு முகத்தில் வெள்ளை மீசையோடு இடுப்பில் கத்தியோடு சலக்கிராம மாலையணிந்து ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சியளிக்கிறார். வேங்கடவர் சுட்டிக் காட்டிய கிருஷ்ணர் என்பதால், வேங்கடகிருஷ்ணன் என்று பெயர்.
குடும்பத்துடன் கிருஷ்ணர்
வேங்கடகிருஷ்ணனுக்கு அருகே அதே கம்பீரத்தோடு, கூர்மையான நாசியும் புன்சிரிப்பு தவழும் உதடும் வலது கையில் குமுத மலரும் கொண்டு ருக்மணி தேவி இருக்கிறார். ருக்மணி தேவியின் வலப்பக்கத்தில் உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார். வேங்கடகிருஷ்ணரின் இடப்பக்கம் தம்பி சாத்யகியும், அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் காட்சி தருகிறார்கள். குடும்பத்துடன் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால் குடும்ப ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை.
வேதவள்ளித்தாயார்
பார்த்தசாரதி சன்னதிக்கு வலது புறத்தில் வேதவல்லித் தாயாரின் சந்நதி அமைந்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேதவல்லித் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பெருமாளுக்கு நைவேத்தியத்தில் கடலை எண்ணெய், மிளகாய் சேர்ப்பதில்லை. இதற்கு பதிலாக நெய் மற்றும் மிளகு சேர்க்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக் கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும், மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.
தழும்புகளுடன் இறைவன்
இந்த பார்த்தசாரதி சிலையில் மற்ற அங்கங்கள் மிக சுத்தமாக இருக்க, முகத்தில் மட்டும் தழும்புகள் இருப்பதைக் காணலாம். அது மட்டுமல்லாது இடதுகால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் நகம் இருக்காது. பாரதப் போரில் பீஷ்மர் சரணாகதிக்காக அம்புவிட, அந்த அம்பு கிருஷ்ணரின் அந்த விரல் நகத்தைக் கீறியது என்றும் சொல்கிறார்கள். பார்த்தசாரதியின் இடுப்பில் யசோதையால் கயிறு கட்டப்பட்ட தழும்பு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள்.
ஆதிகாலத்தில், மூன்றுமுறை இந்த பார்த்தசாரதி ஸ்வாமியை உலோகத்தில் வார்த்தும், முகம் மட்டும் பருக்கள் நிறைந்து காணப்பட்டது. என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சிற்பி கவலைப்பட, ‘பாரதப் போரில் என் முகம் அம்பால் காயப்பட்டது. அதை நினைவுறுத்தும் வண்ணமாகவே இந்த இடத்தில் நான் இப்படி எழுந்தருளியிருக்கிறேன்' என்று சிற்பிக்கு, வேங்கடகிருஷ்ணன் கனவில் ஆறுதல் சொன்னதாக செவி வழிச்செய்தியும் உள்ளது.
பஞ்சமூர்த்தி தலம்
இந்த கோவிலில் 5 மூர்த்திகள் மூலவர் அந்தஸ்தில் வைத்து வணங்கப்படுகின்றனர். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ராமபிரான் மற்றும் ரங்கநாதர், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்துள்ளனர். இக்கோயிலில் பார்த்தசாரதிக்கும், நரசிம்மருக்கும் தனித்தனி கொடிமரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்கோயிலின் அமைப்பு.
வரம் தரும் ஆலயம்
இந்த தலத்தில் உள்ள நரசிம்மர் வரப்பிரசாதி. நரசிம்மரை வணங்கினால் கல்வியில் ஞானம் கிடைக்கும், இத்தலத்து பெருமாளை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். இந்த ஆலயத்தின் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தின் எதிரே உள்ள கைரவிணி என்ற திருக்குளம் காணப்படுகிறது. கங்கையை விட புனிதமானது என்கிறது தல புராணம். இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய ஐந்து புனித தீர்த்தங்கள் இந்த திருக்குளத்தில் காணப்படுகிறது என்கிறது ஐதீகம்.
எப்படி செல்வது
பிப்ரவரி மாதம் 10 நாட்களும், ஏப்ரல் மாதம் 10 நாட்களும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, ஆவணி மாதம் ஸ்ரீ ஜெயந்தி ஆகியவைக் கொண்டாடப்படுகிறது. சென்னையில் பாரிமுனையில் இருந்தும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் அண்ணாசதுக்கம் பகுதியில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. திருவல்லிக்கேணியில் பிரதான இடத்தில் அமைந்துள்ளது பார்த்தசாரதி ஆலயம். காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.