திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் - இன்று பந்தகால் நடும் விழா
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பந்தகால் நடும் முகூர்த்த விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பந்தகால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோவில் ராஜ கோபுரம் முன்பு இன்று காலையில் கோவில் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையான முறையில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.
60 நாட்களுக்கு முன்பு இருந்தே விழா ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். தீபத்திருவிழாவிற்காக முன்னேற்பாடாக இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது.
அக்டோபர் மாத ராசி பலன் 2020: மேஷம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாத ராசி பலன்கள்
அண்ணாமலையார் கோவில்
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை. தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் சிவலிங்கமே மலையாக காட்சியளிப்பதாக ஐதீகம். இந்த மலையை இன்றைக்கும் ஏகப்பட்ட சித்தர்கள் அரூபமாக கிரிவலம் வருகின்றனர். இங்குள்ள மலையானது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருக்கார்த்திகை திருவிழா
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்றாடம் விஷேசம் நடைபெற்றாலும் கூட கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருநாளும், அதையொட்டி 10ஆம் நாள் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் இருக்கும். இந்த மகா தீப தரிசனத்தை காண்பதற்கே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு.
தீப திருவிழா எப்போது
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் மகா தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத்திருவிழாவில் பங்கேற்பார்கள்.
பந்தக்கால் விழா
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இன்றைய தினம் விழாவிற்காக பந்தக்கால் நடப்பட்டது. கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டு உள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் முறைதாரர்கள் மட்டுமே முககவசம் அணிந்து கொண்டு கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தீப விழா கொடியேற்றம்
தீபத்திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி தொடர்ந்து 12 தினங்கள் திருவண்ணாமலையில் திருவிழா நடைபெறும். தேர் திருவிழா உள்ளிட்ட இதர விழாக்கள் நடைபெற்று, நவம்பர் 29ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும்.
தெப்ப உற்சவம் மற்றும் இறுதி விழாவான சண்டிகேஸ்வரர் விடையாற்றி திருவிழா வரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விதிக்கும் நிபந்தனைகளின் படியே நடைபெறும் என ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.