கார்த்திகை மாத குபேர கிரிவலத்திற்கு தடை - மானசீகமாக குபேரரை வணங்குங்கள் பலன் உண்டு
திருவண்ணாமலையில் குபேர லிங்கத்தை வணங்கி குபேர கிரிவலம் வருவார்கள். இந்த ஆண்டு குபேர கிரிவலம் வருவதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
திருவண்ணாமலை: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரி நாளான டிசம்பர் 13ஆம் தேதி குபேர கிரிவலம் வருவதற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இந்த ஆண்டு குபேர கிரிவலம் வருவதற்கு வெளியூர் மக்களுக்கு மட்டுமல்ல உள்ளூர் மக்களுக்கும் தடை பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. பவுர்ணமி கிரிவலம் தெரியும் அதென்ன குபேர கிரிவலம் என்று யோசிக்கிறீர்களா? குபேர வலம் வருவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருவது சிறப்பு. ஆண்டுதோறும் கார்த்திகை மாத சிவராத்திரி நாளன்று குபேரனை ஈசனை வணங்கி வலம் வருகிறார் என்பது ஐதீகம்.
வரும் 13ஆம் தேதியன்று குபேர கிரிவலம் வரும் தினமாகும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த பங்குனி மாதத்தில் இருந்தே கிரிவலம் தடை செய்யப்பட்டுள்ளதால் குபேர கிரிவலம் வருவதற்கும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கிரிவலம் வரும் நாளில், கிரிவலம் வந்த அன்று திருவண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம். மறு நாள் அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு, பின்பு ஊர் திரும்பலாம் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். அப்படிச் செய்தால் மட்டுமே, குபேர கிரிவலம் வந்த முழுப்பலனும் நமக்கு கிடைக்கும் என்று அனுபவசாலிகள் தெரிவிக்கின்றனர்.
மலையே எம்பெருமான் ஈசனாக காட்சியளிக்கும் புண்ணிய திருத்தலம் தான் திருவண்ணாமலை. காசிக்கு போய் கங்கையில் குளித்தால் தான் முக்தி தரும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருத்தலம். இவரை வணங்கி கிரிவலம் வந்தாலே எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அதிலும் குபேர லிங்கத்தை தரிசித்துவிட்டு கிரிவலம் வந்தால் அடுத்து வரும் ஏழு தலைமுறைக்கும் நிம்மதியாகவும், குபேரனைப் போல் செல்வச் செழிப்புடனும் வாழலாம்.
கிரிவலம் வரும் பக்தர்கள்
தினந்தோறும், ஆயிரக்கணக்கானோர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு, அப்படியே கிரிவலம் வந்து மீண்டும் அருணாச்சலேஸ்வரரை வணங்கிவிட்டு வருவது வழக்கமான நடைமுறை. அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் வரும் கிரிவலப் பாதையில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன. அதே போல் ஏராளமான சித்தர்களின் கோவில்களும் உள்ளன. இன்றைக்கும் சித்தர்கள், யோகிகள், தேவர்கள் கோவிலை கிரிவலம் வருவதாக ஐதீகம்.
அஷ்ட லிங்க தரிசனம்
அஷ்டலிங்கங்கள் எனப்படும் இந்திர லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம், நிருதி லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம், யம லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் ஆகியவை அமைந்துள்ளன. பொதுவாக, கிரிவலம் வரும் போது, இந்திர லிங்கத்தை தரிசித்து பயபக்தியுடன் வணங்கி தரிசித்துவிட்டு, பின்பு அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் வரை வரிசையாக தரிசித்து விட்டு கடைசியில் அருணாச்சலேஸ்வரரை தரிசித்து விட்டு செல்வோம்.
கிரிவலம் சிறப்பு
பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி போன்ற விஷேச தினங்களில் அதிக அளவில் கிரிவலம் வருவது வழக்கம். அதிலும் கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கானோர் அருணாச்சலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருவது வழக்கம். காரணம் அன்றைக்கு தான் அருணாச்சலேஸ்வரர் ஜோதி வடிவாக நின்று விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் காட்சி கொடுத்தார். இதன் காரணமாகவே அன்றைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
செல்வ வளம் பெருகும்
அதே போல் அஷ்ட லிங்கங்களான இந்திர லிங்கம் தொடங்கி ஈசான்ய லிங்கம் வரையிலும், ஒவ்வொரு லிங்கமும் அமைந்துள்ள தலத்திலிருந்து கிரிவல பயணத்தை தொடங்கி, மீண்டும் அதே தலத்திற்கு வந்து கிரிவல பயணத்தை முடிப்பதால் ஒவ்வொரு விதமான பலாபலன்கள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். குபேர லிங்கத்தை வணங்கி வலம் வந்தால் அடுத்து வரும் ஏழு பிறவிக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கான செல்வ வளம் சேரும்.
செல்வ வளம் பெருகும்
கிரிவலப்பாதையில் ஏழாவதாக அமைந்துள்ளது தான் குபேர லிங்கம். குபேர லிங்கத்தை மற்ற நாட்களை விட சிவராத்திரி நாட்களில் கிரிவலம் வருவது மிக்க நன்மை தரும். அதிலும் கார்த்திகை மாத சிவராத்திரி தினத்தில் வலம் வருவது சிறப்பான பலனை கொடுக்கும்.
குபேரன் வரும் கிரிவலம்
இதற்கு முக்கிய காரணம், கார்த்திகை மாத சிவராத்திரி தினத்தில் தான், செல்வத்திற்கு அதிபதியான குபேரன், பூமிக்கு வந்து, அண்ணாமலையாரை வலம் வருவார் என்பது ஐதீகம். குபேரன் இரவு 7 மணியளவில் தன்னுடைய கிரிவல பயணத்தை தொடங்குவார். அதே நாளில், நாமும் அவருடன் இணைந்து பயபக்தியுடன் குபேர லிங்கத்தை தரிவித்து வணங்கிவிட்டு, அண்ணாமலையாரை கிரிவலம் வந்தால், அருணாச்சலேஸ்வரரின் அருளும், அங்குள்ள சித்தர்கள், யோகிகள், தேவர்கள் மற்றும் குபேரனின் அருளாசியும் கிடைக்கும். அடுத்து வரும் ஏழு ஜென்மத்திற்கும் எந்தவிதமான கஷ்டங்களும் இல்லாமல் குபேரனைப் போல் செல்வச் செழிப்புடன் நீடூழி வாழலாம் என்பது ஐதீகம்
தெய்வ தரிசனம்
அந்த ஒன்றரை மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க முடியாவிட்டால், கவலைப்படவேண்டாம். மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடம் நோக்கி கும்பிட்டால் போதுமானது. வரும் 13ஆம் தேதி நாமும் குபேரனுடன் இணைந்து குபேர லிங்கத்தை தரிசித்து கிரிவலம் வர முடியவில்லையே என்ற கவலை வேண்டாம் நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரையும் குபேரரையும் மானசீகமாக நினைத்து வணங்குங்கள் குபேர கிரிவலம் வந்த புண்ணியமும் அதே போல பலனும் கிடைக்கும்.