திருவண்ணாமலை கிரிவலம்: குபேர வாழ்வளிக்கும் குபேர கிரிவல தரிசனம்
குபேரனைப் போல செல்வ செழிப்போடு வாழ ஆசைப்படுகிறீர்களா? திருவண்ணாமலையில் குபேர லிங்கத்தை வணங்கி குபேர கிரிவலம் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர் கிரிவலம் வருபவர்கள்.
திருவண்ணாமலை: சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருவது சிறப்பு. ஆண்டுதோறும் குபேர கிரிவலம் வரும் பக்தர்கள் இந்த ஆண்டு கார்த்திகை மாத குபேர கிரிவலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த ஆண்டு சிவராத்திரி நாளான வரும் 24ஆம் தேதியன்று, நாமும் குபேரனுடன் இணைந்து குபேர லிங்கத்தை வணங்கி தரிசித்துவிட்டு கிரிவலம் வந்து அனைத்து செல்வ வளங்களையும் பெறுவோம்.
கிரிவலம் வரும் நாளில், கிரிவலம் வந்த அன்று திருவண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம். மறு நாள் அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு, பின்பு ஊர் திரும்பலாம் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். அப்படிச் செய்தால் மட்டுமே, குபேர கிரிவலம் வந்த முழுப்பலனும் நமக்கு கிடைக்கும் என்று அனுபவசாலிகள் தெரிவிக்கின்றனர்.
மலையே எம்பெருமான் ஈசனாக காட்சியளிக்கும் புண்ணிய திருத்தலம் தான் திருவண்ணாமலை. காசிக்கு போய் கங்கையில் குளித்தால் தான் முக்கி தரும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருத்தலம். இவரை வணங்கி கிரிவலம் வந்தாலே எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அதிலும் குபேர லிங்கத்தை தரிசித்துவிட்டு கிரிவலம் வந்தால் அடுத்து வரும் ஏழு தலைமுறைக்கும் நிம்மதியாகவும், குபேரனைப் போல் செல்வச் செழிப்புடனும் வாழலாம்.
கிரிவலம் வரும் பக்தர்கள்
தினந்தோறும், ஆயிரக்கணக்கானோர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு, அப்படியே கிரிவலம் வந்து மீண்டும் அருணாச்சலேஸ்வரரை வணங்கிவிட்டு வருவது வழக்கமான நடைமுறை. கிரி வலம் வருவதற்கு இரண்டு பாதைகள் உள்ளன.
மலையை ஒட்டிச் செல்லும் பாதையில் கரடு முரடான பாறைகளும், முட்களும் நிரம்பியிருக்கின்றன. எனவே இதனை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தவதில்லை.
கிரிவலப்பாதையில் கோவில்கள்
தற்போது வலம் வரும் பாதை, ஜடவர்ம பாண்டிய மன்னனால் கி.பி 1240ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. மலையைச்சுற்றிலும் உள்ள 300க்கும் மேற்பட்ட குளங்கள் இவருடைய காலத்திலேயே உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் வரும் கிரிவலப் பாதையில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன. அதே போல் ஏராளமான சித்தர்களின் கோவில்களும் உள்ளன. இன்றைக்கும் சித்தர்கள், யோகிகள், தேவர்கள் கோவிலை கிரிவலம் வருவதாக ஐதீகம்.
அஷ்ட லிங்க தரிசனம்
அதே போல், இதில் அஷ்டலிங்கங்கள் எனப்படும் இந்திர லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம், நிருதி லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம், யம லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் ஆகியவை அமைந்துள்ளன. பொதுவாக, கிரிவலம் வரும் போது, இந்திர லிங்கத்தை தரிசித்து பயபக்தியுடன் வணங்கி தரிசித்துவிட்டு, பின்பு அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் வரை வரிசையாக தரிசித்து விட்டு கடைசியில் அருணாச்சலேஸ்வரரை தரிசித்து விட்டு செல்வோம்.
பவுர்ணமி கிரிவலம்
பெரும்பாலானவர்கள், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி போன்ற விஷேச தினங்களில் அதிக அளவில் கிரிவலம் வருவது வழக்கம். அதிலும் கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கானோர் அருணாச்சலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருவது வழக்கம். காரணம் அன்றைக்கு தான் அருணாச்சலேஸ்வரர் ஜோதி வடிவாக நின்று விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் காட்சி கொடுத்தார். இதன் காரணமாகவே அன்றைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
நோய் எதிரி தொல்லை நீங்கும்
அதே போல் அஷ்ட லிங்கங்களான இந்திர லிங்கம் தொடங்கி ஈசான்ய லிங்கம் வரையிலும், ஒவ்வொரு லிங்கமும் அமைந்துள்ள தலத்திலிருந்து கிரிவல பயணத்தை தொடங்கி, மீண்டும் அதே தலத்திற்கு வந்து கிரிவல பயணத்தை முடிப்பதால் ஒவ்வொரு விதமான பலாபலன்கள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இந்திர லிங்கத்தை தரிசித்து விட்டு கிரிவலம் வந்தால், இந்திரனின் வாகனமான ஐராவதம் நமக்கு கேட்டதையெல்லாம் வாரி வழங்கும். அக்னி லிங்கத்தை வணங்கி கிரிவலம் வந்தால், நோய், பயம், எதிரிகள் தொல்லை நீங்கும்.
செல்வ வளம் பெருகும்
அந்த வகையில், குபேர லிங்கத்தை வணங்கி வலம் வந்தால் அடுத்து வரும் ஏழு பிறவிக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கான செல்வ வளம் சேரும். கிரிவலப்பாதையில் ஏழாவதாக அமைந்துள்ளது தான் குபேர லிங்கம். குபேர லிங்கத்தை மற்ற நாட்களை விட சிவராத்திரி நாட்களில் கிரிவலம் வருவது மிக்க நன்மை தரும். அதிலும் கார்த்திகை மாத சிவராத்திரி தினத்தில் வலம் வருவது சிறப்பான பலனை கொடுக்கும்.
குபேரன் வரும் கிரிவலம்
இதற்கு முக்கிய காரணம், கார்த்திகை மாத சிவராத்திரி தினத்தில் தான், செல்வத்திற்கு அதிபதியான குபேரன், பூமிக்கு வந்து, அண்ணாமலையாரை வலம் வருகிறார். கிரிவலப்பாதையில் 7ஆவதாக அமைந்துள்ள குபேர லிங்கத்தை தினப்பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரை பூஜை செய்து வணங்கி தரிசித்துவிட்டு, இரவு 7 மணியளவில் தன்னுடைய கிரவல பயணத்தை தொடங்குவார். அதே நாளில், நாமும் அவருடன் இணைந்து பயபக்தியுடன் குபேர லிங்கத்தை தரிவித்து வணங்கிவிட்டு, அண்ணாமலையாரை கிரிவலம் வந்தால், அருணாச்சலேஸ்வரரின் அருளும், அங்குள்ள சித்தர்கள், யோகிகள், தேவர்கள் மற்றும் குபேரனின் அருளாசியும் கிடைக்கும். அதோடு, நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் களைந்துவிடும். நாமும் அடுத்து வரும் ஏழு ஜென்மத்திற்கும் எந்தவிதமான கஷ்டங்களும் இல்லாமல் குபேரனைப் போல் செல்வச் செழிப்புடன் நீடூழி வாழலாம்.
தெய்வ தரிசனம்
அந்த ஒன்றரை மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க முடியாவிட்டால், கவலைப்படவேண்டாம். மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடம் நோக்கி கும்பிட்டால் போதுமானது. இரவு ஏழு மணி வாக்கில் குபேர லிங்கத்தை தரிசித்துவிட்டு கிரிவலம் வர ஆரம்பித்து மீண்டும் குபேர லிங்கம் வரை வந்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். பின்னர், நேராக கோவிலுக்கு சென்று அருணாச்சலேஸ்வரரையும், உண்ணாமுலை அம்மனையும், மற்ற சந்நிதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களையும் தரிசனம் செய்து பின்னர், நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும். குறிப்பாக வேறு எங்கும் செல்வதை தவிர்க்க வேண்டும்.
குபேரனுடன் கிரிவலம்
குபேர கிரிவலம் வரும் நாளில், கிரிவலம் வந்த அன்று திருவண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம். மறு நாள் அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு, பின்பு ஊர் திரும்பலாம் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். அப்படிச் செய்தால் மட்டுமே, குபேர கிரிவலம் வந்த முழுப்பலனும் நமக்கு கிடைக்கும் என்று அனுபவசாலிகள் தெரிவிக்கின்றனர். வரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி சிவராத்திரி தினத்தன்று நாமும் குபேரனுடன் இணைந்து குபேர லிங்கத்தை தரிசித்து கிரிவலம் வந்து அனைத்து செல்வ வளங்களையும் பெறுவோம்.