திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது - பக்தர்கள் அரோகரா முழக்கம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
Recommended Video
திருவண்ணாமலை: அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா என எங்கும் முழக்கம் எதிரொலிக்க அர்த்தநாரீஸ்வரர் நர்த்தனம் ஆட அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டதை லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டிற்கான கார்த்திகை தீப விழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இரு தினங்களுக்கு முன்பு பஞ்சரத தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
பரணி தீப தரிசனம்
இந்த விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அகண்ட தீபமும் மகா தீபமும்
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டது எங்கும் எதிரொலித்தது. இதனையடுத்து வீடுகளிலும் அனைவரும் தயாராக வைத்திருந்த விளக்குகளை ஏற்றினர். கோவில்களில் மின் விளக்குகள் எரிய விடப்பட்டதை அடுத்து ஒளி வெள்ளம் பரவியது. வான வேடிக்கைகளும் நடைபெற்றன.
மலை மீது ஏற கட்டுப்பாடு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள தீப மலை மீது 2,500 பக்தர்கள் மட்டும் நிபந்தனைகளுடன் ஏற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல வேண்டும். கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை கண்டிப்பாக எடுத்து செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
வீடுகளில் தீப ஒளி
திருக்கார்த்திகையின்போது குறைந்தபட்சம் வீடுகளில் 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்பதே இதன் ஐதீகம். வீடு முற்றம், சமையலறை, திண்ணை, மாடம், பூஜையறை, கொல்லைப்புறம் என்று அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது சிறப்பானது என்பதால் அனைவரும் தீபத்தை ஏற்றி வைத்திருந்தனர்.
கிரிவலம் வந்த பக்தர்கள்
பவுர்ணமி நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியதால் நேற்று முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றவாறு உள்ளனர். இதனால் கிரிவலப் பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் அண்ணாமலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
முருகன் கோவில்களிலும் கார்த்திகை தீபம்
இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் கார்த்திகை மகா தீபம் ஏற்றிக் கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றம், பழனி கோவில்களிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் வீடுகளிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர். தமிழகமே தீப ஒளியில் பிரகாசித்துக் கொண்டுள்ளது. பட்டாசுகள் வெடித்தும் மக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.