திருவண்ணாமலை: நவ.23ல் கார்த்திகை தீபத் திருவிழா - 2000 பக்தர்களுக்கு மட்டும் மலையேற அனுமதி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தீபத் திருநாளில் மலையின் மீது ஏற 2,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை: அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 2000 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி விழா, ஆடி பிரம்மோற்சவம், ஆனி பிரம்மோற்சவம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா நவம்பர் 11ஆம் தேதி துர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து, நவம்பர் 14ஆம் தேதி கொடியேற்றமும், 20ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும், 23ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவும் நடைபெறுகின்றன. இதையொட்டி, நவம்பர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்த தீபத் திருவிழாவின்போது திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருநாளில் மலையின் மீது ஏற 2,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார் .
தீபத் திருநாளில் பக்தர்களின் வசதிக்காக 2,600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தெரிவித்த ஆட்சியர், இவ்விழாவையொட்டி பத்து நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்றும் கூறினார்.
கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இப்போதிருந்தே திட்டமிட்டால் அண்ணாமலையாரையும், மலைமேல் ஜோதி வடிவாய் காட்சி தரும் சிவனையும் சிரமமின்றி தரிசனம் செய்யலாம்.