திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா : அண்ணாமலையார் கோவிலில் கோலாகல தொடக்கம்
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1ஆம் தேதியான நேற்று அதிகாலையில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கமிட்டு த
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வான 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1ஆம் தேதியான நேற்று அதிகாலையில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள கொடியேற்றத்துடன் தொடங்கியது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் திருவிழா தான். ஏராளமான சித்தர்களும், முனிவர்களும் இன்றைக்கும் அரூபமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். நாள்தோறும் கிரிவலம் வந்தாலும், பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அதிக அளவில் கிரிவலம் வருவதுண்டு.
இந்த கோவிலில் நாள்தோறும் திருவிழாக் கோலம் தான் என்றாலும், மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படுவது பெரிய கார்த்திகை எனப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தான். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து திருவிழாவில் கலந்துகொண்டு பக்திப் பரவசத்தில் நனைவதுண்டு.
பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமையில் இருந்தே கொடியேற்ற நிகழ்வைக் காண மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் கோவில் முன் காத்துக்கிடந்தனர்.
கொடியேற்ற நிகழ்வு நடப்பதற்கு முன்பாக கடந்த நவம்பர் 28ஆம் தேதியன்று இரவு கிராம தேவதைகளான துர்கையம்மன் உற்சவமும், பின்னர் பிடாரியம்மன் உற்சவமும் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமையன்று முழுமுதற்கடவுளான விநாயகர் உற்சவமும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. தங்கக் கொடிமரத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் சிவாச்சாரியார்கள் கொடியேற்றி தீபத்திருவிழா நிகழ்ச்சியை முறையாக தொடங்கிவைத்தனர். நேற்று அதிகாலை முதலே திருவண்ணாமலை பகுதிகளில் மழை பெய்துகொண்டிருந்தது.
ஆனாலும், மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து வெள்ளி வாகனங்களில் அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், பராசக்தி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலா வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பஞ்சமூர்த்திகளும் மூஷிகம், வெள்ளி அதிகார நந்தி, அம்ச சிம்ஹவாகனம், மயில் வாகனங்களில் திருவீதியுலா வந்தனர். தீபத்திருவிழா நடைபெறும் நாட்களில் காலை மற்றும் இரவு வேளைகளில், பஞ்ச மூர்த்திகளின் திருவீதியுலா வைபவம் நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வரும் 10ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அன்று அதிகாலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.