செல்வ வளமும் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? ஜேஷ்டா விரதம் இருங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்.
ஒரு முறை யார் அழகுஎன்று ஸ்ரீதேவிக்கும் மூத்த தேவியான ஜேஷ்டா தேவிக்கும் சர்ச்சைஉண்டாகிவிட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!
ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூத்ததேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூத்ததேவிதான் அழகுஎன்றால், ஸ்ரீதேவி கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தநாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும்விதமாக, எங்கே! சற்று முன்னும் பின்னுமாக நடந்துகாட்டுங்கள் என்றார்.
ஸ்ரீதேவியும் மூத்ததேவியும் நாரதர் முன் ஒய்யாரமாக நடைநடந்தார்கள். சட்டென நாரதர், "ஸ்ரீதேவி வரும்போதுஅழகு. மூத்ததேவி போகும் போது அழகு!" என்று சொல்ல...இரு தேவிகளுக்குமே பூரிப்பு!
மூத்ததேவி எனும் ஜேஷ்டா தேவி
நம் வீடுகளில் யாராவது ஆத்திரம் கொண்டு மற்றவர்களை திட்டும்போது மூதேவி என்று கூறுவது உண்டு. அப்படிக் கூறினால் திட்டப்படுபவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், அதிருஷ்டமே இல்லாதவர்கள், அவர்கள் இருக்கும் இடத்தில் தரித்திரம் இருக்கும் என்று எண்ணுவதினால்தான் அந்த வார்த்தையை கெட்ட வார்த்தையாக எண்ணி உபயோகிக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அப்படி திட்டுகையில் அவர்கள் மூதேவியை அவர்களை அறியாமலேயே மனதார வணங்கி துதிக்கிறார்கள் என்பதே உண்மை.
மூதேவி என்பவள் யார்? புராணங்களின்படி அவள் மஹாலஷ்மியின் மூத்த சகோதரி. அவளும் லஷ்மி தேவியைப் போல ஆராதிக்கப்பட வேண்டியவளே. அவள் தீய தெய்வம் அல்ல. தீமை என்பது என்ன என்பதை எடுத்துக் காட்டி உயிரினங்களை நல் வழிப்படுத்த விஷ்ணுவினால் தோற்றம் தரப்பட்டவளே மூதேவி என்பவள்.
ஜேஷ்டா தேவி வழிபாடு:
இந்த தேவி, உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி அல்லது மூத்த தேவி ஆகும். இவளை சமஸ்கிருதத்தில், ஜேஷ்டா தேவி என்று அழைப்பர். ஜேஷ்டா என்றால், முதல் என்று பொருள். தமிழில், சேட்டை என்று கூறுகின்றனர். தசமகா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில், ஒரு தேவி பூஜிக்கப்படுகிறார். அவளை, தூம்ர வாராஹி என்றும், ஜேஷ்டா என்றும் குறிப்பிடுகின்றன.
ஜேஷ்டா தேவியின் சிற்ப அமைப்பை பூர்வகரனாகமம், லிங்க புராணம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஜேஷ்டா தேவி சிலையின் வலப்புறம் காளை மாட்டு தலையை கொண்ட ஆண் உருவமுடைய மகன் குளிகனும் இடப்புறம் மகள் மாந்தினியும் காணப்படுகின்றனர். பல்லவர் காலத்தில் உச்சத்தில் இருந்த ஜேஷ்டா தேவி வழிபாடு, பிற்கால சோழர் காலத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ள பல்லவர் கால, சோழர் கால சிவன் கோயில்களில் இன்றும் ஜேஷ்டா தேவி வழிபாடு காணப்படுகிறது.
ஜேஷ்டா தேவி வழிபாடு செல்வ வளத்தை பெருக்குவதோடு ஆரோக்ய வாழ்வின் முக்கிய தேவையான நிம்மதியான தூக்கத்தையும் தருகிறது என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
தூக்கமின்மை:
ஒருவர் எவ்வளவு சம்பாரித்தாலும் எத்தனை கோடி சொத்து வைத்திருந்தாலும் அவருக்கு தூக்கம் வரவில்லை என்றால் அத்தனை சொத்துக்களும் வீண்தான்.
ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு தூங்குகிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் காலையில் விழிக்கும்போது உடல் சோர்ந்து காணப்படுவார்கள். கண்களும் பொலிவற்று காணப்படும். அதன் தாக்கத்தால் அன்றைய பொழுதை தடுமாற்றத்துடன்தான் கடக்கமுடியும்.
நம்மில் பலர் இரவில் தூக்கம் வராமல் சிரமப்பட்டிருக்கிறோம், இன்றும் பட்டுக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள். இவர்களுக்கு இரவு சாப்பிட்டு படுத்தவுடன் தூக்கம் வராததால், படம் பார்ப்பது, நன்பர்களுடன் மெசேஜ்மூலம் பேசுவது, பாடல்கள் கேட்பது அல்லது புரண்டு புரண்டு படுப்பது என செய்வதுண்டு
\"மெத்தையை வாங்கினேன், தூக்கத்தை தொலைத்தேன்\" என கவிஞர் கண்ணதாசன் எழுதினார். ஆம்! நல்ல தூக்கம் ஒரு வரப்பிரசாதாம்.
ஆனால் எப்படிப்பட்ட தூக்கம் என்பதை ஒருவர் ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளே தீர்மாணிக்கின்றன.
நிம்மதியான தூக்கத்திற்கான ஜோதிட காரணங்கள்:
1. நன்றாக தூங்கினாலும் சரி! தூக்கமின்மையால் அவதியுற்றாலும் சரி! அதனால் பாதிப்படைவது மூளைதான். மேலும் தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இந்த மூளைக்கும் நரம்பிற்க்கும் அதிபதியான வித்யாகாரகனான புதபகவான்தான் தூக்கத்திற்க்கு முக்கிய காரக கிரகமாகும். ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி ஆகிய மூன்று நக்ஷத்திரங்களும் புதனின் ஆளுகைக்கு உட்பட்ட நக்ஷத்திரங்கள் ஆகும்.
ஒருவருக்கு மூளை கோளாருகள், மன அமைதியின்மை, கோமா நிலை போன்றவற்றையெல்லாம் புதனின் அசுப சேர்க்கைகள் ஏற்படுத்திவிடுகிறது.
2. ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும்.அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. ஆக ஒருவருக்கு நல்ல மனோநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும்.
3. இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொருத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மாணிக்கமுடியும். இரவில்தான் தூங்கவேண்டும் என்பது இயற்க்கையின் நியதி. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.
4. அடுத்ததாக தூக்கத்தை தீர்மானிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்க்கு வரும். நல்ல சுவையான உணவு (சுக்கிரன்), குளுமையான சூழ்நிலை (சுக்கிரன்) இனிமையான இசை (சுக்கிரன்) வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் (சுக்கிரன்) கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி (சுக்கிரன்) இவையெல்லாம் நினைத்து பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும்.
5.ஒரு ஜாதகத்தில் புதன் சந்திரன் சுக்கிரன் ஆகிய மூன்றும் கேந்திர பலம், திரிகோண பலம் பெற்று நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்க்கு குறைவிருக்காது. இந்த மூன்று கிரகங்களில் ஒரு கிரகம் பலமிழந்துவிட்டாலும் அந்த ஜாதகரின் தூக்கம் சுகமானதாக அமையாது.
6. கர்ம வினைக்கும் தூக்கத்திற்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும். கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்கள் சனி, ராகு, கேது மற்றும் குருவாகும். சனி, ராகு மற்றும் கேது லக்னத்திலோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களிலோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ அல்லது லக்னாதிபதி, சந்திரன் மற்றும் சூரியனோடு நின்று கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்களாகும். குரு மறைமுகமாக கர்ம வினையை தெரிவிப்பவர் ஆவார்.
7 . பாவக ரீதியாக ஒருவர் தூக்க சுகத்தை அனுபவிக்க லக்ன பாவம் பலமாகவும் அசுப கிரகங்கள் தொடர்பில்லாமலும் சுப கிரக சேர்க்கையும் பெற்று இருக்க வேணெடும். ஓருவர ஜாதகத்தில் லக்னம் கெட்டுப்போன நிலையில் எந்தகிரகம் எந்த சுகம் தந்தாலும் அது ஒட்டை பாத்திரத்தில் நிரப்பிய நீர் போன்று ஜாதகருக்கு பலனளிக்காமல் போய்விடும்.
சூரியன் முதல் பாவத்துக்கு அதிபதி மற்றும் ஆத்ம காரகன் ஆகின்றார். மற்றும் செவ்வாய் காலபுருஷ ராசிக்கு லக்னாதிபதி ஆகின்றார். இவற்களின் நிலையும் நிம்மதியான தூக்கத்திற்க்கு முக்கியமானதாகும்.
8. அடுத்தது தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோக்ஷ. ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் 12ம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தை பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையை கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டே இருப்பார்கள்.
காலபுருஷனுக்கு 12ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூட கிடைக்காது.
9. அடுத்தது தூக்கத்தினை தீர்மானிக்கும் பாவங்கள் சுகஸ்தானம் எனப்படும் 4ம் பாவம், பாவாத்பாவத்தில் 4க்கு 4ஆன. ஏழாம் பாவம் எனப்படும் களத்திர ஸ்தானமும் 7க்கு 4ஆன பத்தாம் பாவம் எனப்படும் கர்ம ஸ்தானமும் ஆகும்.
காலபுருஷனுக்கு கேந்திரவஸ்தானங்களிலோ அல்லது ஜெனன ஜாதக கேந்திர ஸ்தானங்களிலோ சனி அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் கோழி தூக்கம்தான்.
10. ஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கினையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும்.
11. கணவன்/மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. ஆண் ஜாதகத்தில் ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் மனைவியாலும் பெண் ஜாதகத்தில் ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் கணவனாலும் தூக்கம் பறிபோகும்.
மற்றும் நண்பர்களும் நமது தூக்கத்தை சூறையாடிவிடுவார்கள்.
13. சுகஸ்தானமான 4ம் பாவத்திற்க்கு 7ம் பாவம் பத்தாம் பாவமாகும். எனவே ஒருவருடைய சுகமும் வேலையின் தன்மையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். ஒன்று வலுக்கும்போது மற்றொன்று செயலிழந்துவிடும். ஒருவர் தூக்கத்தையே கதி என்று இருப்பதும் வேலையே கதி என்று இருப்பதும் தீர்மானிப்பது இந்த இருபாவ தொடர்புகளாகும்.
ஜேஷ்டா தேவி கோயில்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரை அருகே கெஞ்சனூர் கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த மேகலீஸ்வரி, நேமிலீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜேஷ்டா தேவியை லலிதாபரமேஸ்வரி என்னும் பெயரில் மக்கள் வணங்கி வருகின்றனர்.
தூக்கத்தின் முக்கிய காரகரான புதனின் நாளில் ஜேஷ்டா நக்ஷத்திரம் எனும் கேட்டை நக்ஷத்திர நாளில் புதனையும் ஜேஷ்டா தேவியையும் வணங்கி வளமான வாழ்வும் நிம்மதியான தூக்கமும் பெற்று வாழ்வோமாக!