தீராத நோயினால் அவதியுறுகிறீர்களா? குமார ஷஷ்டியில் கெளமாரியை வணங்குங்க!
சென்னை: நாளை (18/07/2018) ஆஷாட நவராத்திரியின் ஆறாம் நாள். சஷ்டி திதி. அதிலும் விசேஷமான கெளமார ஷஷ்டி விரதமாகும். திருமயிலை எனும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் ஆஷாட நவராத்திரி திருவிழாவும் கெளமாரி மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகளும் மிக சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.
கந்தனின் அருள் வேண்டி பக்தர்கள் அனுஷ்டிக்கும் மிகமுக்கியமான விரதங்களில் கந்த சஷ்டி விரதமும் ஒன்று. "சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே ஆனால் இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகவும் காணப்படுகின்றது. சஷ்டி திதியில் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாகக் கிடைக்கும். அகப்பை என்பது உள்ளிருக்கும் கர்ப்பப்பையைக் குறிக்கிறது. அந்தத் திதியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் கருப்பை கருத்தரிக்கும் என்பது அர்த்தம். அதனால்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும்:
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களைவிடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது.எவ்வளவு பெரிய பணக்காரர்கள் என்றாலும், உயர்பதவி வகிப்பவர்கள் ஆனாலும், கல்வி ஞானம் உடையோர் நாவன்மைமிக்கோர், உழைப்பாளிகள் போன்றோருக்கு ஆரோக்கியம் இல்லையெனில் அவர்களது கல்வியும், உழைப்பும், நாவன்மையும் இவ்வுலகுக்கு பயன்படாமலேயே போய்விடும். இவ்வுலகில் ஆரோக்கியம் இல்லையெனில் திறம்பட செயலாற்ற முடியாது. "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்பார்கள். எனவே நோயற்ற வாழ்வுக்கு ஆன்மிகமும் ஜோதிடமும் காட்டும் வழிகளை அறிய முயலுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
ஆறாம் இடத்தை வைத்து ஒரு மனிதன் அனுபவிக்கும் நோய் , எதிரி மற்றும் கடன் இவற்றை அறிய முடியும். மேலும் சிறை தண்டனை கூட இந்த இடத்தை வைத்து கூற முடியும். ஆறாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் ஒரு மனிதனுக்கு எதிரிகள் குறைவாக இருப்பார்கள். அதுவே சுப கிரகம் அங்கே இருந்தால் அனேக எதிரிகளை எதிர்கொள்ளும் நிலை கொடுக்கும்.
ஜோதிடத்தில் நோய் தீர்க்கும் அமைப்பு:
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.
ஜென்ன ஜாதகத்திற்க்கு ஆறாம்வீட்டிற்க்கு பன்னிரெண்டாம் பாவத்தையும் அதன் கிரஹங்களையும் கொண்டு நோய் தீர்க்கும் அமைப்பை அறியலாம். அதேபோல காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பன்னிரெண்டாம் பாவமான சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம், தனுசு ஆகிய ராசிகளும் அதன் அதிபதிளும் நோய் தீர்க்கும் அமைப்பை கூறுவார்கள்.
காலபுருஷனுக்கு லக்னமான மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெறுவது, சுப கிரஹ்ங்கள் இருப்பது மற்றும் சுப கிரஹங்களின் பார்வை பெறுவது ஆகியவை ஜாதகருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் அமைப்பாகும்.
காலபுருஷனுக்கு தர்ம திரிகோண ராசிகளில் அமைந்துள்ள நக்ஷதிரங்கள் முறையே கேது, சுக்கிரன், சூரியன் ஆகிய கிரஹஙளின் சாரஙளை பெற்றிருக்கும். கேது மருத்துவத்திற்க்கும் ஆன்மிகத்திற்க்கும் காரக கிரகம் ஆகும். சுக்கிரன் நோய் குணமடைவதற்க்கும் சுகமளிப்பத்ற்க்கும் காரகர் ஆகும். சூரியன் ஆத்ம காரகர் ஆகும். எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து நோய் வராமல் காப்பதற்க்கும் நோய் குணமாவதற்க்கும் சூரிய பகவானின் அருள் மிக முக்கியமானதாகும்.
நோய் தீர்க்கும் மருத்துவதிற்க்கான கிரஹங்கள்:
ஒருவருக்கு நோய் விரைவில் குணமாக மருத்துவத்தொடு தொடர்புடைய கீழ்க்கண்ட கிரகங்கள் வலுவாக ஜாதகத்தில் அமைந்திருக்கவேண்டும்.
1.ஆரோக்கியத்திற்குரிய கிரகம் சூரியன். சூரியனை ஆத்ம காரகன் என ஜோதிடம் போற்றுகிறது. ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்பது ஜோதிடப் பழமொழி.
2.இரத்தம், அறுவைச் சிகிச்சை இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற செவ்வாய்.
3.மருத்துவம் மற்றும் மருந்துக்களுக்கு காரக கிரகமான புதன். மேலும் பொதுவாகவே கல்விக்கு காரகனான புதனை வித்யாகாரகன் என போற்றுகிறது பாரம்பரிய ஜோதிடம். ஜோதிடத்திற்க்கும் புதன் காரகன் என்பது குறிப்பிடத்தக்கது.
4. கேதுவை மருத்துவ கிரகம் என்று சாஸ்திரம் சொல்கிறது. கேது மணி, மந்திர ஔஷதங்களுக்கு காரக கிரகமாகும்.
5.ராகு மேற்கண்ட மருத்துவக் கிரகங்களுடன் தொடர்புகொள்ளும்போது அத்துறையில் தீவிரமான ஈடுபாடுகொள்ள வைக்கிறது.ராகு மறைந்து இருக்கின்ற பொருள், உள் விஷயங்கள் மற்றும் விஷம், ரசாயனம் ஆகியவற்றை குறிக்கின்ற கிரகம்.
6.மருந்து, மாத்திரைகள், விஷம் சம்பந்தப்பட்டவைதான். ஒரு ரசாயனம் மருந்து மற்றொரு ரசாயனத்துடன் சேரும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு மருந்தும் விஷத்தமையுடையதுதான். அதனால்தான் அந்த மருந்து அளவு மீறிப்போகும்போது வேறு விதமான உப, துணை நோய்களை ஏற்படுத்துகிறது. ஆகையால்தான் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு-கேது மருத்துவத்திற்கும், ரசாயனத்திற்கும், வேதிப்பொருள்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
ஜோதிடத்தில் சஷ்டி திதி:
இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவுகளில் மிகப் பழைமையானது கௌமாரம். கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே முருக பக்தர்கள்! ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் இந்த குமரனுக்கு உரிய நாள். எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள். ஜோதிடத்தில் அழகை குறிக்கும் கிரஹம் சுக்கிரன். குழந்தை பிறப்பிற்க்கு தேவையான காமத்திற்க்கும் சுக்கிலத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனை குறிக்கும் என் ஆறு.
தெய்வங்களில் அழகன் எனப்போற்றப்படுபவர் முருகன். முருகனுக்கு ஆறு முகங்கள். முருகனை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்டீர். முருகனுக்குகந்த திதி ஆறாவது திதியான சஷ்டி. ஆண்மையை குறிக்கும் கடவுள் முருகப்பெருமான் ஆகும். "சுக்கிற்க்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" எனும் சொலவடை உண்டு. ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையை குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையை குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும். அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குறிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்.
ஆஷாட நவராத்திரி (13.07.2018- 21.07.2018)
ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.
பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக்கொள்கின்ற காலம். விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும். விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது. ஆஷாட நவராத்திரியில் அன்னையரை வணங்குவது சுக்கிரன் மற்றும் சந்திரனை மகிழ்வித்து விவசாயம் பெருகும் என்பது நிதர்சனம்.
ஆஷாட நவராத்திரியின் ஆறாம் நாள்:
ஆஷாட நவராத்திரியின் ஆறாம் நாளான சஷ்டியில் நாளை சக்தி தேவியை கௌமாரி தேவியாக வழிபட வேண்டும். மயில் வாகனமும், சேவல்கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்; ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள். கல் யானை வடிவத்தை எடுப்பவள். பராசக்தியினின்று உதித்த கௌமாரி அழகு, அறிவு, வீரம் ஆகியவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களை தட்டாமல் நிறைவேற்றுபவள்.
இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள். மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களோடு அபயமும், வரதமும் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரம் கொண்டவள். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூல் இந்த அன்னையைப் பற்றி விரிவாக விளக்குகிறது.
காலத்தின் வடிவை ஸ்தூலமாய் உருவகப்படுத்தினால் 60 வருடங்களையும் அறுபது படிகளாகக் கொண்டு அதன் மேல் கோலோச்சும் சுவாமிநாதன் 60 வருடங்களாகிய காலத்தின் ஸ்தூல ரூபம். காலத்தை ஒரு வருடத்தின் உருவமாகக் கொண்டால் முருகனின் இரு கால்கள் தட்சிணாயனம், உத்ராயணம் ஆகிறது. ஆறு ருதுக்களும் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களே பன்னிரண்டு மாதங்களாகும்.
அதேகாலம் ஒரு நாளாய் உருவம் கொண்டால் இரவு, பகல் என்றாகிறது. அதுவே முருகனின் வடிவமாய் எடுத்துக்கொண்டால் இரவு வள்ளி, பகல் தேவஸேனை. இந்த இரண்டு கௌமார சக்திகளும் இணைந்த ஒருவரே முருகனின் ரூபம். முருகனை காலரூபமாகவும், காலத்தை தன் வசத்தில் வைத்திருப்பவனாகவும் பேசுகிறது கந்தபுராணம்.
தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில், 'வீரபாண்டி' என்னும் ஊரில், வைகை ஆற்றின் கிளை நதியான முல்லையாற்றங்கரை அருகே, அத்தனை சாந்தமாகக் கோயில் கொண்டு வீற்றிருக்கிறாள், அருள்மிகு கௌமாரி அம்மன். பார்வை பறிபோன வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னன், சிவபெருமானை பிரார்த்திக்க, சிவபெருமான் மன்னன் கனவில் தோன்றி, கெளமாரி அம்மனை வணங்கி இழந்த பார்வையை திரும்பப் பெறுமாறு கூறினார். மன்னனும் அப்படியே செய்து கண் பார்வை பெற்றதாகவும், அதற்குக் காணிக்கையாக கோயிலைப் புதுப்பித்துக் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
புத்திரப் பேற்றினை தட்டாமல் தரும் சகல வல்லமை பொருந்திய மகிமை வாய்ந்த, முருகனின் சக்தியான கௌமாரி, தன்னை வணங்குபவர் வாழ்வில் வளம் சேர்ப்பாள். மேலும் அவளை வணங்குபவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையையும் அனைத்து நோய்களையும் தீர்த்து ஆரோக்ய வாழ்வளிக்கும் சத்தியாம் கெளமாரி.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
9498098786