தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்கினால் சகல கஷ்டமும் தீரும்
இன்று தேய்பிறை அஷ்டமி திதி. இன்றைக்கு கால பைரவரைத் தரிசித்து,விளக்கேற்றி வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் யாவும் காணாமல் போகும்.
சென்னை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று பைரவரை மறக்காமல் வழிபடுங்கள். உங்கள் கவலைகள் காணாமல் போகும். சகலத்தையும் பார்த்துக் கொள்வார் பைரவர். வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மகா காளி யாகம் நடைபெற உள்ளது.
எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.
படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இவரே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார்.
நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபட்டால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் கூறினால் விரைவில் செல்வம் பெருகும்.
இந்த ஆண்டு தேய்பிறை அஷ்டமி நாட்கள்
- சித்திரை 25 மே 8 - செவ்வாய்க்கிழமை
- வைகாசி 23 புதன்கிழமை இரவு வைகாசி 24 வியாழக்கிழமை பகல்
- ஆனி 22 வெள்ளிக்கிழமை
- ஆடி 19 சனிக்கிழமை இரவு ஆடி 20 ஞாயிற்றுக்கிழமை பகல்
- ஆவணி 18 திங்கட்கிழமை
- புரட்டாசி 16 செவ்வாய்க்கிழமை
- ஐப்பசி 14 புதன்கிழமை
- கார்த்திகை 14 வெள்ளிக்கிழமை
- மார்கழி 14 சனிக்கிழமை
- தை 13 ஞாயிற்றுக்கிழமை இரவு தை 14 திங்கட்கிழமை பகல்
- மாசி 14 செவ்வாய்க்கிழமை
- பங்குனி 14 வியாழக்கிழமை
மகா காளி யாகம்
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் காளி யாகத்துடன் காலபைரவர் யாகம் நடைபெற உள்ளது. காளி யாகத்தில் கலந்துகொண்டால் துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும் யாகம் நடைபெற உள்ளது. வியாபார மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும், சொந்த வீடு, வாசல், நன்மக்கள் அமையவும் இந்த மாபெரும் மகா காளி யாகத்தில் அனைவரும் பங்கேற்கலாம். இந்த யாகத்தில் வல்லக்கோட்டையில் ஸ்ரீ பகளாமுகி பீடத்தின் பீடாதிபதி திரு. பீதாம்பர ஸ்வாமிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். தொடர்புக்கு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் செல் – 9443330203.