இன்று வாஸ்து நாள்: வாஸ்து உங்க தோஸ்து ஆக உங்க வீட்டு பாத்ரூம் எந்த திசையில் இருக்கணும் தெரியுமா
இன்று வாஸ்து நாள். வீடு கட்டிடம் கட்ட வாஸ்துபகவானை வணங்கி வீடு கட்டும் பணியை தொடங்க தடைகள் இன்றி கட்டிடம் கட்டி குடியேறலாம்.
மதுரை: உறக்கத்தில் இருந்த வாஸ்துபகவான் இன்று விழிக்கும் நாள்.வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீர்மானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம். இந்த வாஸ்து சாஸ்திரத்தின் அதிபதியே ஸ்ரீ வாஸ்து புருஷர் ஆவார். இவர் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். இந்த நேரத்தை வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்வதிற்கு உகந்த நேரம் ஆகும்.
சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். அவ்வாறு செய்யும் நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது. வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை.
கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும்.
அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.
இன்று 04. 06.2019 செவ்வாய்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வாஸ்து சாந்தி ஹோமமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
இன்றைய தினம் சொந்த வீட்டில் வசிப்பவர்களும், வாடகை வீட்டில் வசிப்பவர்களும் வீட்டை சுத்தம் செய்து, நிலைப்படிகளுக்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடலாம். சொந்த வீடு சுபிட்சமாக இருக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் விரைவில் சொந்த வீடு கட்டுவார்கள்.
எந்த திசையில் குளியலறை அமைப்பது நல்லது
ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! குளியல் – கழிவறை அமைப்புக்கு 90% சதவீதம் சிறப்பைத் தரும் பகுதி வடமேற்கு. இதனை வாஸ்து மொழியில் வாயுமூலை என்று அழைக்கலாம். இந்தப் பகுதியில் குளியலறை அமையப் பெற்றால் வீட்டிற்கு வாஸ்து யோகத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் தடையற்ற பொருளாதரம், திருப்திகரமான இல்லற வாழ்க்கை, நல்லவர்களின் நட்பு போன்ற பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன. பொதுவாக மேற்கு, வருண திசையாக இருப்பதால், மேற்கு மையமும், வடமேற்கும், குளியலறை அமைப்பதற்கு ஏற்ற இடம்.
கிழக்கு மையத்தில் அமைந்த குளியலறையும் திருப்திகரமான குடும்ப வாழ்க்கையைத் தரும். மருத்துவச் செலவுகளைக் குறைக்கும். எதையும் சமாளிக்கலாம் என்கிற மன உறுதியையும் அது வழங்கும். தெற்கு மையத்தில் குளியலறை அமைந்திருந்தாலும் நல்லதே. அந்தக் குடும்பத்தில் பெண்குழந்தைகள் கலை தொடர்பான துறையில் புகழ் பெறுவார்கள். காரணம் தெற்கு, பெண் ஆதிக்க திசை. இன்னும் சிலருக்கு தாங்கள் விரும்பிய குடும்ப வாழ்க்கை அமையவும் வாய்ப்பிருக்கிறது. அந்தக் குடும்பத்தின் பெண்களுக்கு சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் ஏற்படும்.
மேற்கு மையத்தில் குளியலறை அமைந்திருந்தாலும் மேலே சொன்னது போன்ற சிறப்பையே தரும். ஆனால் இது ஆண் ஆதிக்க திசை என்பதால் இது ஆண்களுக்குரிய பலன்களைத் தரும். அயல் நாடுகளில் வேலை வாய்ப்பு அல்லது திருப்திகரமான சொந்தத் தொழில், அந்தஸ்து போன்றவை அமையும். அந்த வீட்டின் நவீன பொருட்களின் சேர்க்கை இருக்கும்.
குளியலறை தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம். தென்கிழக்கு குளியலறை ஆரோக்யக் கெடுதியை உண்டாக்கும். குறைக்க இயலாத மருத்துவச் செலவுகள் ஏற்படுத்தும். கடன் சேரும். வருமானம் குறையும். தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் குளியலறை-கழிவறை அமைந்தால், மருத்துவ செலவுகள், ஆபத்தான அறுவை சிகிச்சைகள், திடீர் விபத்துகள், பெரும் கடன் தொல்லை, பொருள் இழப்பு ஏற்படும்.
பரிகாரம் என்ன
சிலரது வீட்டில் குடிப்பதற்கு கூட குடிநீர் கிடைக்காமல் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். சில குடும்பத்தில் வீடு கட்டுதல், மனை வாங்குதல், தொழில் துவங்குவதல், விவசாயம் செய்தல், வீடு பழுது பார்த்தல், நகை வாங்குதல், போன்ற எந்த விதமான செயல்களில் இறங்கினாலும் அதில் பல்வேறு வகையான தடைகள் ஏற்படும். சிலரது வீட்டில் குடும்ப தலைவனோ, குடும்ப தலைவியோ வசிக்க மாட்டார்கள். சிலரது வீட்டில் அடிக்கடி பொருட்கள் திருடு போவதும், தீ விபத்து ஏற்படுவதுமாக இருக்கும். சிலரது வீடடில் எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் சேரவே சேராது. சிலரது வீட்டில் துர்மரணங்கள் ஏற்படும். இன்னும் சிலரது வீடடில் தேவை இல்லாமல் பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இதற்கான முக்கிய காரணம் ஜாதக தோஷம் மட்டுமின்றி வாஸ்து பிரச்சனையாக கூட இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட இன்று வாஸ்து நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. பக்தர்கள் பங்கேற்று வாஸ்து தோஷத்திற்கு பரிகாரம் செய்து கொள்ளலாம்.