கார்த்திகை தீபத்திருநாளின் மகிமை: ஜோதியாய் நின்ற அடி முடி அறிய முடியாத அண்ணாமலையார்
தீபம் என்பது நம் உள்ளத்தில் எழும் அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞானத்தின் ஒளியை பரவச் செய்யும். தீபம் ஏற்றும் இடம் எங்கும் மங்கலம் நிறைந்திருக்கும்.
திருவண்ணாமலை: அடி, முடி காண முடியாத ஜோதி ரூபமாய் சிவன் விஸ்வரூபம் எடுத்து நின்ற தலம் திருவண்ணாமலை. அக்னி ரூபம் எடுத்த சிவனே திருவண்ணாமலையில் அண்ணாமலையாக வீற்றிருக்கிறார். சிவன் அக்னி பிழம்பாக நின்ற நாளே கார்த்திகை தீபத் திருநாள்.
தீபத் திருநாளில் தீபம் ஏற்றும்போது புழு, பச்சி, கொசு உள்ளிட்ட சகல தாவரங்களும், விலங்குகளும், மனித உயிரினங்களும் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவியில் உள்ளவர்கள் இப்படி யார் யார் மீதெல்லாம் இந்த தீப ஒளி படுகிறதோ அவர்களெல்லாம் மறுபிறவி என்ற துன்பம் இல்லாமல் நித்தமும் மகிழ்ச்சியை அடைவதே இதன் நோக்கம்.
இறைவன் சந்நிதியில் தீபமேற்றப்படுவதை மகாபலிச் சக்கரவர்த்தியின் கதையை கேட்டாலே தீபம் ஏற்றுவதன் மகத்துவத்தை அறியலாம்.
முற்பிறவியில் எலியாக பிறந்திருந்தார் மகாபலி சக்கரவர்த்தி. ஒரு கோவிலில் தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது வால் மூலம் அந்த விளக்கின் திரி தூண்டப்பட்டது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று.
தன்னை அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவருளை பெற்றான்.
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். அப்போது அங்கு வந்த சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. யார் முதலில் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்று போட்டி வைத்தார் சிவன்.
ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன். அன்னமாய் மேல் நோக்கிப் பயணித்தார் பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்றார் விஷ்ணு. பிரம்மாவின் வழியில் தாழம்பூ ஒன்றின் மடல். தென்பட்டது. பிரம்மாவுக்கு ஆச்சரியம், பூமியில் பூக்கும் தாழம்பூ வானத்திற்கு வந்தது எப்படி என்று பூவிடமே கேட்டார்.
தான் சிவன் தலையில் இருந்து விழுவதாக அந்தப் பூ பொய் கூறியது. உடனே பிரம்மன் பொய் நாடகம் போட முடிவு செய்தார். சிவன் முடியைத் தொட்டு இந்தத் தாழம்பூவை எடுத்து வந்ததாக தான் கூறப்போவதாகவும், அதனைத் தாழம்பூ உண்மை என்று கூற வேண்டும் என்றும் கட்டளையிட்டார். தாழம்பூ சம்மதித்தது. சிவனிடம் சென்றார்கள். இந்தப் பொய் நாடகத்தை நிறைவேற்றினார்கள்.
ருத்திர ரூபனான, ஒளிப் பிழம்பான சிவன், இப்பொய் நாடகத்தைக் கண்டு மேலும் கோபத்தால் சிவந்தார். தாழம்பூவுக்கும் பிரம்மனுக்கும் தண்டனையையும் வழங்கினார். தாழம்பூவை நான் தரிக்கமாட்டேன் என்று சபதம் இட்டார். பிரம்மனுக்கோ இனி இந்த பூமியில் பூஜையும் இல்லை கோவிலுமில்லை என்று கூறினார்.
உடனே மன்னிப்பு கேட்டார் பிரம்மா, தாங்கள் இருவரும் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை தீப விளக்கு ஏற்றுவதன் தத்துவமாகும்.