திருப்பதி பிரம்மோற்சவம்: ஏழுமலையானுக்கு நிழல் தரும் திருக்குடைகள் கவுனி தாண்டும் வரலாறு
திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழக மக்கள் சார்பாக, இந்த ஆண்டும் ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், ஏழுமலையானுக்கு அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து செ
சென்னை: திருப்பதி ஏழுமலையானுக்கு நிழல் தரும் வெண்பட்டுக்குடைகள் தமிழகத்தில் இருந்து ஞாயிறன்று திருமலை சென்றடைகிறது. வரும் 17ஆம் தேதி திங்கட்கிழமை கருடசேவை நாளில் ஏழுமலையானுக்கு இந்த புதிய குடைகள் நிழல் தரும்.
புரட்டாசி பிறந்து விட்டாலே எங்கும் கோவிந்தா நாமம்தான். தமிழகத்திற்கும் ஏழுமலையானுக்கும் உள்ள தொடர்பை யாராலும் பிரிக்க முடியாது. தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்கள் மட்டுமல்லாது திருப்பதிக்கும் படையெடுப்பார்கள். எனவே புரட்டாசியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பிரம்மோற்சவம் என்றால் கேட்கவே வேண்டாம் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.
திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஏழுமலையான் சேவைக்காக ஆண்டுதோறும் தமிழக மக்கள் சார்பில் அழகிய வெண்பட்டுக் குடைகள் ஊர்வலமாகச் சென்று, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் சமர்ப்பிக்கப்படும். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சமர்ப்பிக்கும் இந்தத் திருக்குடைகள், கருடசேவை மட்டுமின்றி ஆண்டு முழுவதும் திருமலை உற்சவங்களில் பயன்படுத்தப்படும்.
திருப்பதி மலையில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் போது கோயில் உற்சவர் மலையப்பசாமியை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். அப்போது உற்சவருக்கு முன்னும், பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகள் எடுத்துச் செல்வார்கள். பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருட்கள் போன்றவற்றால் அழகிய வேலைப்பாடுகளுடன் சுமார் ஏழு அடி விட்டம், ஏழு அடி உயரத்துடனும் ஐந்து அல்லது ஆறு குடைகள் தயாரிப்பார்கள்.
சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இந்தப் பணி நடைபெறும். இவற்றை திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க, சென்னையில் இருந்து சாலைகள் வழியே எடுத்துச் செல்லும் வைபவத்துக்குத்தான் திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்று பெயர்.
வடசென்னையின் பிரபலமான விழாவாக இது கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது. வழிநெடுகிலும் பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருப்பதி குடைகளுக்கு பூரண கும்ப மரியாதை செய்தனர். ஊர்வலப்பாதை நெடுகிலும் அன்னதானம், நீர்மோர், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
பூக்கடை பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் 11 குடைகள் ஆடி அசைந்து வந்த காட்சியைக் காண கண் கோடி வேண்டும். இவைதவிர, பெருமாளின் பொற்பாதங்கள், தசாவதார உற்சவர் சிலைகள், ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடேசப் பெருமாள் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பவனி வந்தன. பிற்பகல் 12.30 மணிக்கு பைராகி மடத்துக்கு வந்த குடைகள் மாலை 4.30 மணிக்கு கவுனி தாண்டிச் சென்றன.
நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு, ஆவடி இந்துக் கல்லூரி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் வீரராகவர் கோயில் வழியாக ஆ.கே.என் திருமண மண்டபத்தை அடைந்தன. இன்று காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருப்பாச்சூர் கனகம்மாள் சத்திரம் வழியாக கீழ்த்திருப்பதி எஸ்.எம்.ஓ .சபா கல்யாண மண்டபம் அடையும். நாளை 16ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதியம் 3 மணியளவில் மேல் திருப்பதியை அடைந்து பெருமாளுக்கு குடைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன.
இந்த பதினோரு குடைகளில் ஆறு குடைகள் சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு கோவிலில் வைக்கப்படுகிறது நாளை 16 தேதி 2 திருக்குடைகள் மட்டுமே திருப்பதி கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 2 திருக்குடைகள் திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு சமர்ப்பிக்கப்படும். மற்றவை செல்லும் வழியில் உள்ள பைராகி மடத்துக்கும், திருவள்ளூர் கோயிலுக்கும் அளிக்கப்படும்.
பின்னர் திருமலையில் மாட வீதிகளில் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் மதியம் 3 மணிக்கு முறையாக சமர்ப்பணம் செய்யப்படும். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் நடைபெறும் கருட சேவை மிகவும் பிரதானமான வைபவம். இந்த ஆண்டு 17ஆம் தேதி கருடசேவை நடைபெறுகிறது. அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து பெருமாளின் கருடசேவை வைபவத்தை தரிசித்துப் பரவசப்படுவார்கள். அன்றைய தினத்தில் சென்னையிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் குடைகள் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும்.
குடைகள் யானை கவுனி தாண்டும் வரலாறு
திருப்பதி ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கி அதை இன்னமும் அடைத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஏழுமலையான், தனது திருமணத்திற்காக யானை கவுனியில் கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம். இது 180 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள்.
யாத்திரை கொண்டு செல்லும் குடைகளில் இரண்டு மட்டுமே திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும். மற்றவை செல்லும் வழியில் உள்ள பைராகி மடத்துக்கும், திருவள்ளூர் கோயிலுக்கும் அளிக்கப்படும். திருப்பதியில் பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளான கருடோற்சவத்தின்போது இந்தக் குடைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.
இந்தக் குடைகள் ஆதிசேஷனுக்கு நிகரான முக்கியத்துவம் பெறுகின்றன. திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் இடமெல்லாம் மங்களம் பெரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திருப்பதிக் குடை ஊர்வலம் செல்லும் வழியெங்கும் வசிக்கும் பொதுமக்கள், ஏழுமலையான் பக்தர்கள் திருக்குடைகளை தரிசனம் செய்ய கூடுகின்றனர்.