திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி நாளில் சிறப்பு தரிசனம் ரத்து
ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பா் 30, 31, ஜனவரி 1 மற்றும் ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் தேவஸ்தானம் அளித்து வரும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அந்த நாள்களில்
திருப்பதி: ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விஷேச நாட்களை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு தரிசனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்தாண்டு ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விஷேச நாட்களை முன்னிட்டு கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சூரிய கிரஹணத்தை முன்னிட்டு டிசம்பா் 25ஆம் தேதி இரவு 11 மணி முதல் 26ஆம் தேதி மதியம் 12 மணிவரை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளது. 26ஆம் தேதி மதியம் 2 மணி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். சூரிய கிரஹணத்தை முன்னிட்டு அன்னதானக் கூடமும் மூடப்படுவதால் அந்நாள்களில் அன்னதானமும் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
திருமலையில் வரும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பா் 30, 31, ஜனவரி 1 மற்றும் ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் தேவஸ்தானம் அளித்து வரும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அந்த நாள்களில் வாடகை அறை முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மார்கழி மாதத்தில் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி, ரொம்பவும் விசேஷம். தமிழகத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிக பிரபலம். அதேபோல திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்றும், அதற்கு மறுநாள் துவாதசி நாளில் நடைபெறும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்க வாசல் நிகழ்வை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் திருமலையில் குவிவார்கள். பலமணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். வழக்கமாக திருப்பதியில் ஆன் லைன் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும். வைகுண்ட துவாரம் நிகழ்வையொட்டி ஆன் லைன் டிக்கெட் விற்பனை கிடையாது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதால் தங்குவதற்கான வசதிகள் கிடைப்பதும் சிரமம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அன்று நள்ளிரவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மற்றும் 7ஆம்தேதி வைகுண்ட துவாதசி விழா ஆகியவை நடக்கிறது. பரமபத வாசல் வழியாகச் சென்று பக்தர்கள் 2 நாட்கள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.