திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் - வைகுண்டம் வழியாக பக்தர்களுக்கு அனுமதி
திருமலை ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருப்பதி: ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருமலையில் வி.ஐ.பி தரிசனம், சர்வதரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பணக்கார கடவுள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். பிரம்மோற்சவ நாளில் லட்சக்கணக்கானோர் வருகை தருவார்கள். ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி தொடங்கி, 16ஆம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6 மணி முதல் சுவாமி தரிசனம் ரத்துசெய்யப்படுகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இதற்கு, பக்தர்களிடையே பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் அதிருப்தியைப் பதிவுசெய்திருந்தார்கள். இதனையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம், கும்பாபிஷேகம் தொடர்பாக ஏற்கெனவே வெளியிட்டிருந்த அறிவிப்பை திரும்பப்பெற்றது.
திருமலையில் கோலாகலம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 12ஆம்தேதி முதல் 16ஆம்தேதி வரை ஏழுமலையான் கோவிலிலும் அதனை சார்ந்த மற்ற சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுகிறது.
12ஆம் தேதி முதல் விழாக்கோலம்
ஆனந்த நிலையம், கருடாழ்வார் சன்னதி, தாயார் சன்னதி, வரதராஜர், யோக நரசிம்மர், ஆஞ்சநேய சுவாமி சன்னதிகளிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆகஸ்ட் 11ஆம்தேதி இரவு 9 மணி முதல் 10 மணிக்கிடையே அங்குரார்ப்பணம் நடக்கிறது. 12ஆம்தேதி பாலாலயம் மற்றும் முதல் யாக சாலையில் உற்சவமூர்த்திகள் கருவறையில் இருந்து யாக சாலைக்கு கொண்டு வரப்பட உள்ளனர்.
16ஆம் தேதி கும்பாபிஷேகம்
தொடர்ந்து 13ஆம்தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரையும், இரவு 7 மணி முதல் 10 மணி வரை 9 மணி நேரம் யாக சாலையில் பூஜைகள் நடக்கிறது.14ஆம்தேதி யாக சாலையில் சிறப்பு பூஜைகளும், 15ஆம்தேதி அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மூலவருக்கு மகா சாந்தி திருமஞ்சனமும் நடக்கிறது. இரவு யாக சாலையில் மகா பூரணாஹூதி நடக்கிறது. 16ஆம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தரிசனம் கிடைக்கும்
கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில், எந்த வழிமுறையில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்பதுகுறித்த தங்களின் மேலான கருத்துகளை வருகிற 23ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். தேவஸ்தானம், திறந்த மனதுடன் பக்தர்களின் கருத்தைக் கேட்டறியக் காத்திருக்கிறது' என்று கோயில் நிர்வாக அதிகாரி அசோக் சிங்கால் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக் கேட்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், 24ஆம் தேதி நடைபெற்றது. அதன்படி முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்களை ஆகஸ்ட் 11 முதல் 16 ஆம் தேதி முடிய சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது.
மண்டல பூஜை
இந்த நாள்களில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் . வி.ஐ.பி தரிசனம், சர்வதரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்கிடையே கருட வாகனத்திலும், இரவு 9.30 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது. அக்டோபர் 3ஆம்தேதி வரை 45 நாட்களுக்கு சிறப்பு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.