ருணம், ரணம் போக்கும் செவ்வாய்கிழமை பிரதோஷம் - சிவ தரிசனம் கோடி புண்ணியம்
வாலாஜா ஸ்ரீ தன்வந்த்ரி பீடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை.5.00,மணிக்கு பிரதோஷத்தை முன்னிட்டு 468,சிவலிங்க ரூபமாக உள்ள சித்தர்களுக்கும்,ஸ்ரீ மரகதேஸ்வரர் சமேத மரகதா ம்பிகை அம்பாளுக்கும் பிரதோஷ பூஜைகள்
சென்னை: செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.
பிரதோஷ தரிசனம் பெரும்புண்ணியம். பிரதோஷம் சிவ பூஜைக்கு உகந்தது. வளர்பிறை, தேய்பிறைகளில் வரும் திரயோதசியில் சந்தியா வேளையில் அனுசரிக்கப்படும் பிரதோஷ நாளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும் அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம் "ருண விமோசன பிரதோஷம்" என்று அழைக்கப்படுகிறது. .
ருணம் என்றால் கடன் ஆகும். வாழ்வில் கடன் சுமையில் மீளமுடியா நிலையில் உழன்று கொண்டிருப்பவர்கள், வருமானத்திற்கு மீறிய கடன் சுமை உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷத்தில் தொடர்ந்து கலந்து கொண்டபடியே முயற்சியை மேற்கொண்டால் இறைவனும் நம்முடன் கலந்துகொண்டு கடன் தீரும் வகையில் நம்மை வழி நடத்துவார்.
மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு! இதனால், செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும். பித்ரு தோஷம் விலகும். முன்னோர் ஆசி கிடைக்கும். கடன் தொல்லை தீரும்.
எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது சத்தியம்!
சித்தர்களின் ஜீவ சமாதி, 100ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிவாலயங்கள்,ஸ்ரீ சரபேஸ்வரர் சன்னிதி போன்ற இடங்களில் வழிபாடு செய்யலாம். ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் வழிபாடும் இந்த பிரதோஷ காலத்தில் சிறப்பானது. அருணாசல கிரிவலம் மிக மிக சிறப்பு. மற்ற இடங்களிலும் கிரி வலம் செய்யலாம்.
அன்றைய தினம் மௌன விரதம் இருப்பது கூடுதல் பலன் தரும். கேரட் சாதம், தக்காளி சாதம், துவரை சாதம் அன்னதானம் செய்யலாம்.
அன்று ரத்ததானம் செய்யலாம். முருகப் பெருமான் குடி கொண்டுள்ள ஸ்தலங்களில் கிரி வலம் செய்யலாம்.
பழனி,திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் , கழுகு மலை சிறப்பு ஸ்தலங்கள்.
திருச்செந்தூர் செல்வோர் ஸ்ரீ சத்ரு ஸம்ஹார மூர்த்தி ஸ்வாமி ஜீவ சமாதியிலும், கழுகு மலை செல்வோர் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவ சமாதியிலும்,பழனியில் ஸ்ரீ போகர் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர பட்டர் ஜீவ சமாதியிலும், திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ மாயாண்டி சித்தர் ஜீவ சமாதியிலும் இந்த நாளில் தியானம் செய்யலாம்.