கொரோனாவால் களையிழந்த உகாதி - வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து விளக்கேற்றுங்க
உகாதி பண்டிகை நாளான்று மக்கள் அனைவரும், சூரிய உதய நேரத்திலும், அந்தி சாயும் மாலை வேளையிலும் தங்களுடைய வீட்டு வாசலில் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்து மனமுருகி இறைவனை வேண்டினால் கொரோனாவின் பிடியில் இரு
மதுரை: யுகாதி வருடப்பிறப்பை கொண்டாடலாம் என்றிருந்தவர்களுக்கு, கொரோனா என்னும் வைரஸ் அரக்கன் குறுக்கில் புகுந்து சீர்குலைத்துவிட்டது. இந்த தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு, உலக நன்மைக்காகவும், நாடு, மொழி, இனம், மதம் என அனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும்,கொரோனாவைரஸ் தாக்குதலில் இருந்து மீள்வதற்காக மனமுருகி பிரார்த்தனை செய்தால், வெகு விரைவிலேயே அந்த வைரஸின் தாக்குதலில் இருந்து விடுபடலாம். வீட்டு வாசலில் மஞ்சள் நீர் சாணம் தெளித்து விளக்கேற்றி இறைவனை வேண்டினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நலம் பெறுவார்கள்.
2020ஆம் ஆண்டு பிறந்த உடன் உலக மக்கள் அனைவரும் இந்த ஆண்டு ஆஹா ஓஹா என இருக்கப்போகிறது என்று பெரு மகிழ்ச்சியோடு புத்தாண்டை கொண்டாடினார்கள். ஜோதிட வல்லுனர்கள் அனைவரும் ஒரே குரலில் இந்த ஆண்டு அனைவருக்குமே அமோகமா இருக்கும் என்று உத்திரவாதம் கொடுத்தார்கள். அந்த நேரத்தில் ஒரே ஒரு நாடு மட்டும் அழுது கொண்டிருந்தது. அது தான் உலக வல்லரசுகளில் ஒன்றான சீன தேசம் மட்டும் தான்.
ஒரு தனி நபரின் அல்லது ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு ஊரின் வாழ்க்கை திடீரென தலைகீழாக மாறும் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். வரலாற்றிலும் படித்திருக்கிறோம். ஆனால் ஒரு தேசத்தின் தலைவிதியே திடீரென தலைகீழாக மாறிவிட்டதை நாம் இப்போது தான் நேரடியாக பார்த்து பதறி துடிக்கிறோம். கொரோனவைரஸ் என்னும் கொடிய அரக்கன் சீனாவில் உருவாகி அந்த நாட்டை சீரழித்ததோடு, கிட்டத்தட்ட 150க்கும் நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது.
சீனாவில் உருவான கொரோனா
கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி அங்குள்ள சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியதோடு, எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டதோடு, மற்ற நாடுகளுக்கும் பரவி சுமார் நான்கு லட்சம் மக்களை தாக்கி நோய் தொற்று ஏற்படுத்தியுள்ளது. அதோடு சுமார் பனிரெண்டாயிரத்துக்கும் அதிகமானவர்களை பலிவாங்கி விட்டது. இது வரையில் இந்நோயின் தாக்கத்திலிருந்து சுமார் ஒரு லட்சம் பேர்களை வரை குணமடைந்துவிட்டது சற்று ஆறுதலான விஷயம்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவிலும் இது வரையிலும் கொரோனா வைரஸ் தாக்கியதில் 10 பேர்கள் பலியாகியுள்ளனர். சுமார் 450க்கும் மேற்பட்டவர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று மற்ற நாடுகளுக்கு பரவிய சமயத்தில், இங்குள்ளவர்களில் 90 சதவிகிதம் பேர் இங்கெல்லாம் கொரோனா வைரஸ் தாக்காது, நம்ம பாக்காத வைரஸா என்று அசட்டையாக இருந்ததால் தான் இந்த நிலைமை.
144 தடை உத்தரவு
கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இன்று அதாவது மார்ச் 24ஆம் தேதி மாலை முதல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி காலை 6 மணி வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம், அத்தியாவசிய தேவை இல்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. அப்படி செய்தால் தான் நோயின் தாக்கத்தை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.
உகாதி பண்டிகை
கொரோனா வைரஸ் பீதியினால் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் யுகாதி என்னும் தெலுங்கு வருடப் பிறப்பு களையிழந்துள்ளது. வசந்த காலத்தின் தொடக்கத்தை குறிக்கு நாளாக இந்த யுகாதி வருடப்பிறப்பு என குறிப்பிட்டு சொல்வதுண்டு. குறிப்பாக படைப்பு தொழிலை மேற்கொண்டுள்ள பிரம்மா, இந்த யுகாதி திருநாளில் தான் உலகத்தையும் மனிதர்களையும் படைத்தார் என்று பிரம்ம புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
களையிழந்த உகாதி
வழக்கமாக யுகாதி வருடப் பிறப்பு நன்னாளை, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் மிகப் பிரமாண்டமாக கொண்டாடுவதோடு கோவில்களுக்கு சென்று இறைவனை தரிசிப்பதுண்டு. அதோடு, இந்த நாளில் தான் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதோடு புதுக் கணக்குகளையும் இந்த யுகாதி நன்னாளில் தான் ஆரம்பிப்பார்கள். காரணம் இந்த நன்னாளில் எந்த ஒரு புது முயற்சியை மேற்கொண்டாலும் அந்த முயற்சி தங்கு தடையின்றி செயல்பட்டு வெற்றியை தேடித்தரும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
கொடிய கொரோனா
இந்த ஆண்டு யுகாதி வருடப்பிறப்பை கொண்டாடி தீர்க்கலாம் என்றிருந்தவர்களுக்கு, கொரோனா என்னும் வைரஸ் அரக்கன் குறுக்கில் புகுந்து சீர்குலைத்துவிட்டது. இந்த தருணத்தில், இந்துக்கள் அனைவரும் ஒன்று பட்டு, உலக நன்மைக்காகவும், நாடு, மொழி, இனம், மதம் என அனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும், கரோனாவைரஸ் தாக்குதலில் இருந்து மீள்வதற்காக மனமுருகி பிரார்த்தனை செய்தால், வெகு விரைவிலேயே அந்த வைரஸின் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.
உகாதியில் விளக்கேற்றுவோம்
உகாதி நாளில் காலை சூரிய உதயத்திலும், அந்தி சாயும் மாலை வேளையிலும் தங்களுடைய வீட்டு வாசலில் கோலவிட்டு விளக்கேற்றி, மனமுருகி இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டால், உலக மக்கள் அனைவரும் விரைவில் நலம் பெறுவார்கள். எந்தவித அச்சமோ பீதியோ இன்றி சந்தோஷமாக வாழ்வார்கள் என்பது உறுதி. ஆகவே, நாளை காலை சூரிய உதயத்தின் போதும், மாலை வேளையிலும் வீட்டு வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி இறைவனை வழிபட்டு உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்வோம். தீபம் இருளை விரட்டும். கொரோனாவை விரட்ட நம்பிக்கையோடு விளக்கேற்றுவோம்.