சூரியனும் சனியும் இணைந்து ஊழலுக்கு வெக்கபோறாங்க ஆப்பு - யுகாதி கூறும் கட்டியம்!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
அனைத்து தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கும் யுகாதி தின நல்வாழ்த்துகள்!!
யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது. தெலுங்குப் புத்தாண்டான யுகாதி இன்று பிறக்கிறது. திருப்பதியில் கோவில் உற்ஸவம் அனைத்தும் யுகாதி முதல் தொடங்கப்படுவது வழக்கம். இதையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் சிறப்பு வழிபாடு நடக்கும். கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்படும். அதிகாலை மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடக்கும். பின் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்ஸவர் மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும் அதன் பின் ஜீயர் சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரும் பட்டு வஸ்திரம் சுவாமிக்கு அணிவிக்கப்படும். ஆஸ்தான பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டின் பலன் கூறுவர். கோவில்களில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கும். இன்று ராமாயணம் கேட்டால் புத்தாண்டு சுபிட்சமாக அமையும் என்பது நம்பிக்கை.
யுகாதி:
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும். உகாதி அல்லது யுகாதி தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர்.
யுகாதி பச்சடி:
யுகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில்பேவு பெல்லா என அழைப்பர்.
யுகாதியும் ஜோதிடமும்:
சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் ஜோதிடத்தில் 'யுகம்' என்று குறிக்கின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் அதே ஆரம்ப இடத்தில் இணையும். ஆனால் சூரிய, சந்திர சுழற்சி நாட்காட்டியை பயன்படுத்துபவர்கள் முறையே சூரியன், சந்திரன் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் அந்த 0 டிகிரியைத் தொடும் தினங்களை அவரவர் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவர்.
ஜோதிட ரீதியாக சூரியன் ஹிந்தி மற்றும் சமஸ்க்ருத பாஷைகளின் அதிபதியாகவும் செவ்வாய் தெலுங்கு தமிழ் மராட்டியம் ஆகிய மொழிகளின் அதிபதியாகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
மேலும் அரசியல், அரசாங்கம் ஆகியவற்றின் காரகரும் சூரிய பகவானே! அந்த சூரிய பகவான் உச்சம் அடையும் இடம் செவ்வாயின் வீடு என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு பேசுபவர்கள் மற்றும் ஆந்திர மக்கள் செவ்வாயின் அதிக்கம் நிறைந்து காணப்படுகின்றனர். ஒல்லியான தேகம், முரட்டுதனம் கடின உழைப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படுவது, அதிக காரம் மிகுந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவது செவ்வாயின் காரக குணங்களாகும்.
தெலுங்கு வருடப்பிறப்பு எந்த தினத்தில் வருகிறதோ அந்த தினத்தின் கிரகம் அந்த வருடத்தின் ராஜாவாக அமைவார். இந்த வருடம் யுகாதி பண்டிகை ஜோதிட நாளான ஞாயிற்று கிழமையில் சூரியன் ஆதிக்கம் பெற்று அமைந்துள்ளது. எனவே விளம்பி வருடத்தின் ராஜாவாக சூரிய பகவான் அமைந்துள்ளார்.
அதே போன்று சித்திரை மாதம் பிறக்கும் நாளின் அதிபதியே அந்த வருடத்தின் மந்திரியாகும். அவ்வாறே சனி பகவான் விளம்பி வருட மந்திரியாவார்.
வரும் விளம்பி வருடம் அதிகாரமும் அரவணைப்பும் நிறைந்த ராஜாவும் சேவை மனப்பான்மை மற்றும் நீதி நேர்மை நிறைந்த மந்திரியும் இனைந்து ஆளப்போகும் அற்புத வருடமாகும். எனவே மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மக்களுக்கு பயன்படும் வகையில் பல நல திட்டங்களை நிறைவெற்றுவதை எதிர்பார்க்கலாம்.
மேலும் அரசியில் மாற்றங்களுக்கும் காரக கிரஹங்கள் சூரியன் மற்றும் சனியாகும். எனவே அரசியல் மாற்றங்களை மனதில் கொண்டாவது பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாக காணலாம்.
மொத்தத்தில் விளம்பி வருஷம் நீதி நேர்மையுடன் ஆட்சி புரிபவர்களுக்கு ஒரு நல்ல வருஷமாக விளங்கும் என்பது சர்வ நிச்சயம்!