வாழ்வை வளமாக்கும் வைகாசி மாத சஷ்டி - ஆரோக்கியம் அதிகரிக்க விரதம் இருப்போம்
சஷ்டி விரதம் இருந்தால் நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். கொரோனா காலத்தில் சஷ்டி விரதம் இருந்து நோய்கள் நீங்க முருகன் வணங்கி வழிபடலாம்.
சென்னை: சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சஷ்டி விரதம் இருக்க சொல்கின்றனர். சஷ்டி திதி நாளில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒழியும், நோய்கள் நீங்கும். கடன் பிரச்சினை தீரும். வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சஷ்டி விரதத்தின் பலன்களைப் பார்க்கலாம்.
Recommended Video
திதிகளில் முருகப்பெருமானுக்கு உகந்தது சஷ்டி திதி. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய்கிழமை சஷ்டி திதி வருவது சிறப்பானது.
செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.
கந்தனின் திருவடியை விடாது பிடித்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது.
சஷ்டி திதியில் விரதம் இருந்து சண்முகனை வணங்கினால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே சஷ்டி விரதம் இருக்கும் இந்த நாளில் தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படித்து வேலனைப் போற்றுங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும். தீவினைகள் எல்லாம் மாயமாகி விடும்.