பௌர்ணமி நிலவில் வசந்த உற்சவ விழா - கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு அழகர்மலையில் உள்ள கள்ளழகர் ஆலயத்திலும் பழமுதிர்சோலை சுப்ரமணியர் ஆலயத்திலும் வசந்த உற்சவ விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை: அழகர்மலையில் வசந்த உற்சவ விழா பௌர்ணமி நிலவு ஒளியில் களைகட்டியது. கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பழமுதிர்சோலை முருகன் ஆலயத்தில் வைகாசி விசாகத்தை ஒட்டி சஷ்டி மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி எழுந்தருளினார். சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் பிரசித்த பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி மாதம் 10 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகும்.
சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் வைகையில் இறங்கிய கள்ளழகர், அழகர் மலைக்கு திரும்பி இளைப்பாறிய உடன் வைகாசி பௌர்ணமியை ஒட்டி வசந்த உற்சவம் தொடங்கி விடும். பத்து நாட்களும் வசந்த மண்டபத்தில் கள்ளழகர் தம் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சம். சித்திரை பௌர்ணமியில் கள்ளழகரை தனியாக தரிசித்தவர்கள், வைகாசி வசந்த விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தரிசனம் செய்வது விஷேசமாகத்தானே இருக்கும்.
வசந்த மண்டபத்தில் அழகர்
இந்த வருடத்திற்கான விழா பத்து நாட்கள் நடைபெற்றது. சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவல்லி முன் செல்ல அங்குள்ள வசந்த மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். கோடையின் வெப்பத்தை தணித்து குளிர்ந்த மழையை பெய்ய வைப்பதற்காக இங்கு பெருமாள் வந்து செல்வது வழக்கம் என ஜதீகமாக கூறப்படுகிறது.
மூலிகை நிறைந்த காற்று
அழகர்மலையின் மூலிகை கலந்த வசந்த காற்றுகள் இந்த காலநிலையில் அதிக அளவு வீசும் என்பதால், கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கிறார்கள்.
பௌர்ணமி நிலவு ஒளியில் தரிசனம்
வசந்த மண்டபத்தில் தேவியருடன் எழுந்தருளிய கள்ளழகரை பௌர்ணமி நிலவு ஒளியில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளம் முழங்க பரிவாரங்களுடன் கள்ளழகர் கோவிலுக்குள் சென்றார்.
சோலைமலை முருகன்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாம்படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி மாத வசந்த உற்சவ விழா வைகாசி விசாக விழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானை சமேதராக சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகள் நடைபெற்றன. புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.