வைகாசி வசந்த உற்சவம்: மீனாட்சி அம்மன் கோவில்,அழகர்கோவிலில் கோலாகலம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், சோலைமலை முருகன் கோவில்களில் வசந்த உற்சவம் களைகட்டியுள்ளது. சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு கூடாரப்பாறை பாலசுப்பிரமணியர் கோவிலில் வைகாசி வசந்த உற
மதுரை: வைகாசி மாதம் என்பது வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் பிற்பகுதி ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோவில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன. சைவ, வைணவ ஆலயங்களில் வசந்த உற்சவ விழாக்கள் தொடங்கியுள்ளன.
சித்திரை திருவிழா முடிந்து சில வாரங்கள் கடந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் அழகர் கோவிலிலும் வசந்த உற்சவம் தொடங்கியுள்ளது. வைகாசி வசந்த உற்சவம் 9ஆம் தேதி தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 17ஆம் தேதிவரை சுவாமி, அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் தினமும் மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து எழுந்தருளி புதுமண்டபம் சென்று அங்கு பக்தி உலாத்துதல், தீபாராதனை முடிவடைந்தவுடன் 4 சித்திரை வீதிகள் சுற்றிவந்து கோவிலை வந்தடைவர்.
18ஆம் தேதி காலை புது மண்டபத்தில் எழுந்தருளி, பகலில் தங்கி வழக்கம் போல் மாலையில் அபிசேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதிகளை சுற்றி வந்து கோவிலை வந்தடைவர்.
அழகர் கோவில் வசந்த உற்சவம்
திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் பிரசித்த பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி மாதம் 10 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்திற்கான விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவல்லி முன் செல்ல அங்குள்ள வசந்த மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். வருடம் ஒருமுறை இந்த மண்டபத்திற்கு சாமி எழுந்தருள்வது வழக்கம்.
வசந்த மண்டபத்தில் அழகர்
கோடையின் வெப்பத்தை தணித்து குளிர்ந்த மழையை பெய்ய வைப்பதற்காக இங்கு பெருமாள் வந்து செல்வது வழக்கம் என ஜதீகமாக கூறப்படுகிறது. மேலும் அழகர்மலையின் மூலிகை கலந்த வசந்த காற்றுகள் இந்த காலநிலையில் அதிக அளவு வீசும் என்பதால், கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கிறார்கள்.
கூடாரப்பாறை பாலசுப்ரமணியர்
சிவகிரி ஜமீனுக்குப்பாத்தியப்பட்ட அருள்மிகு கூடாரப்பாறை பாலசுப்பிரமணியர் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா பூஜை நடந்தது விழாவை முன்னிட்டு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. வசந்த மண்டபம் தெப்பத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமிக்கு அலங்காரத்தில் பூஜைகள் அன்னதானம் நடைபெற்றது. சூரபத்மனை போரிட்டு அழித்த முருகன் இங்கு பாலகனாய் காட்சி தருவதால் பாலசுப்ரமணியர் என்று அழைக்கப்படுகிறார்.
பாலகனாய் காட்சி தரும் பாலசுப்ரமணியர்
முருகப் பெருமான் திருச்செந்துாரில் சூரபத்மனை வதம் செய்து விட்டு, தெய்வானையை மணந்து கொள்ள திருப்பரங்குன்றம் திரும்பினார். அப்போது முருகனைக் காண விரும்பிய அகத்தியர், இத்தலத்தில் உள்ள குன்றின் மீது தவம் செய்து கொண்டிருந்தார். அந்த வழியே வந்த முருக பெருமான் அகத்தியருக்கு குழந்தை உருவில் காட்சி கொடுத்தார். அவரது வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் இங்கு முருகனுக்கு கோயில் எழுப்பட்டது. சூரபத்மனை போரிட்டு அழித்த முருகன் இங்கு பாலகனாய் காட்சி தருவதால் பாலசுப்ரமணியர் என்று அழைக்கப்படுகிறார்.
கூடாரப்பாறை பாலசுப்பிரமணியர் கோவில்
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி வசந்த திருவிழாவை முன்னிட்டு மூலவர் பாலசுப்பிரமணியர் சுவாமி மற்றும் உற்சவர் முத்துக்குமார சுவாமி க்கு பால் தயிர் நெய் பன்னீர் விபூதி குங்குமம் மஞ்சள் சந்தனம் இளநீர் பன்னீர் கரும்பு சாறு எலுமிச்சை சாறு கும்ப நீர் உட்பட பதினெட்டு வகையான நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து விபூதி அலங்காரம் மற்றும் ஆடைகள் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து பத்து நாட்கள் காலை மாலை
சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது
முத்துக்குமாரசாமி வீதி உலா சிவகிரி ஜமீன்தார் ராணி பாலகுமாரி நாச்சியார், ராஜா சேவுகப்பாண்டியன் (எ) விக்னேஷ்வர சின்னத் தம்பியார் கலந்து கொண்டனர். திருவிழாவின் நிறைவு நாளான 18ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முத்துக்குமார சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் குடும்பத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.