முருகன் பிறந்த வைகாசி விசாகத் திருவிழா - திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனியில் கோலாகல தொடக்கம்
முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத் திருவிழா ஒவ்வொரு முருகன் கோயிலிலும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விசாகத்திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம்: முருகப் பெருமானின் அவதார நாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் வைகாசி விசாகத்திருவிழா கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்சோலை உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் வைகாசி விசாகத்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் மயில் என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது மயில் மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது.
வைகாசி விசாகத் திருநாளில் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் முருகப் பெருமானை வழிபடுகின்றனர். முருகன் மட்டுமில்லாது சிவன், அம்மன் வழிபாட்டையும் மக்கள் மேற்கொள்கின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகத்தில் நாமும் விரத முறையைப் பின்பற்றி வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.
திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான விசாக திருவிழாவின் தொடக்கமாக 9ஆம் தேதி வசந்த உற்சவம் தொடங்கியது. கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளினார். அங்கு நீர்நிலையில் அமர்ந்து சுப்பிரமணியசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் வருகிற 17ஆம்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுப்பிரமணியசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 18ஆம் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது.
திருச்செந்தூர் வைகாசி விசாகம்
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விசாகத்திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் அருள்புரிவார். மாலை நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெறும். அதற்குப் பிறகு ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வருவார். அப்போது வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல் பாட்டு ஆகியன இசைக்கப்படும்.
சாபவிமோசனம்
திருவிழாவின் நிறைவு நாளான மே 18ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிப்பார், முருகப்பெருமான். அதைத் தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெறும். இறுதியாக ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார்.
இளவேனிற்கால விழா
இளவேனிற் காலத்தில் இவ்விழா நடைபெறுவதால் திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும்படி செய்து இறைவனுக்குச் சிறுபருப்புப் பாயாசம், நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து உஷ்ணசாந்தி உற்சவம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இங்கு வசந்த மண்டபத்தில் உள்ள நீர்த் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை நீரில் இடப்பட்டு, குமரன் வாயில் இருந்து சிந்திய பாலினை உண்டதால் சாபம் நீங்கப் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவங்களையும் வைத்து சாப விமோன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பழனியில் நாளை கொடியேற்றம்
பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. அதையடுத்து காலை 9 மணிக்கு மேல் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதேபோல் மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் காப்புக்கட்டும் நடக்கிறது. 7ஆம் நாளான வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து தேரோட்டம் நடைபெறுகிறது.