வைகுண்ட ஏகாதசி 2020: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு - கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசலைக்கடந்து வந்து நம்பெருமாள் அருள்பாலித்தார். விடிய விடிய கண்விழித்து காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் பரமபதவாசலை கடந்து சென்று நம்பெருமாளை வழிபட்டனர்.
மகாவிஷ்ணுவின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி நாளான இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இதனையொட்டி விடிய விடிய விழித்திருந்து உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி ஆலயங்களில் காத்திருக்கின்றனர். அதிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்த வாசல், இன்று மட்டுமே திறக்கும். அதுவே, சொர்க்க வாசல் என அழைக்கப்படும். அந்த வாசல் வழியே சென்று இறைவனை பக்தர்கள் வழிபடுவார்கள்.
வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். பெருமாள் சொர்க்கவாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும்.
மோகினி அலங்காரம்
வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்பின் பகல்பத்து உற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாளாகிய நிறைவு நாளான நேற்று ஞாயிறன்று நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அரையர் சேவை
பக்தர்கள் மோட்சம் அடைய விரும்பினால் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்ற ஆசைகளை துறக்க வேண்டும். ஆசைகளில் கொடூரமான ஆசை பெண்ணாசை. எனவே, பெண்ணாசையை துறந்தவர்கள் தான் மோட்சத்தை அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் நம்பெருமாள் நேற்று காலையில் மோகினி அலங்காரத்தில் அழகிய பெண் வேடத்தில் எழுந்தருளினார். அரையர் சேவை மற்றும் பொது ஜன சேவையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நம் பெருமாள் தரிசனம்
அதன்பின் நம்பெருமாள் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் பகல்பத்து அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஆரியபடாள் வாசல் சென்றடைந்தார். அங்கிருந்து திருக்கொட்டாரம் பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சென்றடைந்தார். அங்கு ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுக்கு மரியாதை செய்வித்த பின்னர் இரவு 8.30 மணிக்கு கருடமண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பரமபரவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. அதிகாலை சரியாக 3.15 மணிக்கு ரத்ன அங்கி சேவையுடன் கிளி, மாலை அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 4.30 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்க வாசலை கடந்து சென்றார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரமபதவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து முத்துப்பந்தலில் நம்பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். இன்று இரவு வரை பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம்.
பக்தர்கள் தரிசனம்
சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூரில் உள்ள மாதவப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெருமாள், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், கோவிந்தராஜ பெருமாள் ஆலயம் உள்ளிட்ட பெருமாள் ஆலயங்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது.