வைகுண்ட ஏகாதசி திருப்பதியில்10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு - இன்று தரிசன டிக்கெட் விற்பனை
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆன்லைனில் இதற்கான டிக்கெட் விநியோகம் நடைபெறுகிறது.
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறக்க அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இன்று முதல் ஆன்லைனில் இதற்கான டிக்கெட் விநியோகம் நடைபெறுகிறது.
மார்கழி மாதம் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ராப்பத்து விழாவாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் குழு தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறந்து வைக்க அவர் முடிவு செய்துள்ளார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தரிசன டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று முதல் விற்பனை செய்யப்படும்.
செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி, வழக்கமாக ஆண்டுதோறும் பக்தர்கள் வருகையை ஒட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்
ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்கள் எக்காரணத்தைக் கொண்டும் விற்க முடியாத வகையில் இது வரை விற்பனை செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் தற்போது உள்ள நிலங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சொத்து விபரங்கள் அனைத்தும் தேவஸ்தான இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம்.
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் கொடிமரம், பலிபீடம், மகா துவாரத்திற்கு தங்க தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதையில் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக நிழல் பந்தல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலை பசுமை நகரமாக மாற்றப்பட உள்ளது.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு பேட்டரியால் இயங்கக்கூடிய 150 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருமலை தேவஸ்தான சொத்துக்கள் குறித்த வெள்ளை அறிக்கை, இக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உளுந்தூர்பேட்டையில் நான்கு ஏக்கரில் பத்து கோடி ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.