வைகுண்ட ஏகாதசி: பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடக்கம்
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. வரும் 14ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது.
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. வரும் 14ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
பகல்பத்து. ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. இவ்விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான சனிக்கிழமை திருமொழித்திருநாள் தொடங்குகிறது. அன்றைய தினம் நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இதே போல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். வருகிற 14ஆம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள்.
15, 16, 17, 18, 19 ஆகிய தேதிகளில் பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். 20ஆம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 21-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. 22-ந்தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரையிலும், 23-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 14ஆம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழித் திருநாள் தொடங்குகிறது. அதன்பின்னர் ராப்பத்து ஏழாம் திருநாளான 20ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8ஆம் திருநாளான 21ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெறும். 10ஆம் திருநாளான 23ஆம் தேதி தீர்த்தவாரியும், 24ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது.