வைகுண்ட ஏகாதசி நாளில் விரதமிருந்து சொர்க்கவாசலில் பெருமாளை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள்
எல்லாம் வல்ல பெருமாளின் திருவடியை சொர்க்கவாசல் வழியாகச் சென்று தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தொடங்கி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வரை தமிழகம்
சென்னை: வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்யதேசமான ஸ்ரீரங்கம் தொடங்கி எல்லா பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெறும். எல்லாம் வல்ல பெருமாளின் திருவடியை சொர்க்கவாசல் வழியாகச் சென்று தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளும் இறைவன் தனது பக்தர்களையும் அந்த வாசல் வழியாக அழைத்துச்சென்று அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தொடங்கி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வரை தமிழகம் முழுவதும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 6ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான விழா கடந்த டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பகல்பத்து முடிந்து ராப்பத்து விழாவின் தொடக்கமாக சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
மார்கழி மாதம் பெருமாள் கோவில் நடைபெறும் மகத்துவமான விழா வைகுண்ட ஏகாதசி திருவிழா. 20 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய அம்சமே சொர்க்கவாசல் திறப்புதான். பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் இறைவனைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
52-வது வயதில் அடியெடுத்து வைத்த கனிமொழி... பிறந்தநாள் கொண்டாட்டம் தவிர்ப்பு
ஏகாதசி விரத மகிமை
தாயைக் காட்டிலும் உயர்ந்த தெய்வமில்லை, காசியை மிஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. காயத்ரி மந்திரத்தை விட உயர்ந்த மந்திரம் இல்லை. அது போல் ஏகாதசி விரதத்தை விட சிறந்த விரதமும் இல்லை. அந்த அளவுக்கு மற்ற விரதங்களைக் காட்டிலும் ஏகாதசி விரதம் உயர்ந்ததாகும். அதிலும் மார்கழி மாதத்தில் சுக்லபக்ஷ திதியில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் தான் மிக உயர்ந்த விரதம்.
மார்கழி மாத ஏகாதசி விரதம்
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. அதனால் தான், "மார்கழி மாத ஏகாதசி விரதம் இருந்து என்னை வழிபடும் அனைவருக்கும் யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கோள்வோம்" என்று பகவான் மஹாவிஷ்ணு அருளியிருக்கிறார். அதனால் தான் பகவத் கீதையிலும் கிருஷ்ணபரமாத்மா, மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன், என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாகவே, மார்கழி மாத ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தசமி நாளில் தொடங்கி
இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருமே கடைபிடிக்க வேண்டிய உயர்ந்த விரதமாகும். ஏகாதசி விரதம் இருப்போர், தசமி நாளான இன்று பகல் வேளையில் மட்டும் உண்டுவிட்டு, இரவில் பழங்களை மட்டும் உண்ண வேண்டும். அப்பொழுது தான் விரதம் இருக்கும்பொழுது, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் விரைவில் வெளியேறிவிடும்.
விஷ்ணுவிற்காக விழித்திருங்கள்
ஏகாதசி நாளன்று அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, பூஜை செய்து, பகவான் மஹாவிஷ்ணுவின் மந்திரங்களை சொல்லி விரதம் இருந்து வரவேண்டும். பகல் வேளையிலும் தூங்காமல் விழித்திருந்து விரதமிருக்க வேண்டும். ஏகாதசி நாளன்று, முடிந்தவரை, முழுமையாக விரதமிருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் குடித்து வரலாம். பசி உணர்வு ஏற்பட்டால் ஏழு முறை துளசி இலையை சாப்பிட்டு வரலாம்.
வயிறு சுத்தமாகும்
மார்கழி மாதம் குளிரான மாதம் என்பதால், உடம்புக்கு வெப்ப சக்தி கிடைக்க துளசியை சாப்பிட்டு வரலாம். விரதம் இருப்பதால், குடல் உறுப்புகள் காலியாகி ஜீரண மண்டல உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றை சுத்தமாக்குகிறது. நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், நெய், பழங்கள், காய்கனிகள், வேர்க்கடலை, பால், தயிர் போன்றவற்றை முதலில் பகவானுக்கு படைத்துவிட்டு பிறகு சாப்பிடலாம். ஏகாதசி விரதத்தை எப்படி முறைப்படி தொடங்குகிறோமோ அதே போல் விரதத்தை முறைப்படி தான் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏகாதசி விரதம் இருந்ததற்கான பலன் கிடைக்காமல் போய்விடும்.
மோட்ச ஏகாதசி
மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து உற்சவமாக சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நிதி திறப்பு விழா நடைபெறும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது. நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் எல்லா பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்' என்று வேண்டினார். பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.
சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தொடங்கி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வரை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 26ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதனையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், அதனை நம்பெருமாள் கடக்கிறார். அதன்பின் மணல்வெளியில் பக்தர்களுக்கு காட்சியளித்து விட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்களுக்கு சேவை அளிக்க இருக்கிறார்.
பரமபதவாசலில் பரமன்
சென்னையில் அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு வைபவம் நாளை அதிகாலையில் நடைபெறவிருக்கிறது. இந்த வைபவத்தையொட்டி திருக்கோயிலில் இன்று நள்ளிரவு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அடுத்து, அதிகாலை 2 மணிவரை தனுர் மாத பூஜை நடக்கும். அதிகாலை 2.15 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவமூர்த்தி வைர அங்கியோடு மகாமண்டபத்தில் எழுந்தருளுவார். உற்சவருக்கு அலங்காரம் நடைபெறும். பின்னர் 4 மணியளவில் பெருமாள் உள்பிராகத்தை வலம் வருவார். சொர்க்கவாசல் சரியாக அதிகாலை 4.30 மணிக்குத் திறக்கப்படும். எதிரே நம்மாழ்வாருக்கு அருளியவாறே பரமபத வாசல் வழியாகப் பெருமாள் எழுந்தருளுவார்.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகம்
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்" ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி நாளை 06.01.2020 திங்கள்கிழமை சுக்லபட்ச ஏகாதசி எனும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விடியற்காலை 5.00 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூல ஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான் புறப்பட்டு வந்து, பரமபத வாசல் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி புரிய உள்ளார். இதனை தொடர்ந்து காலை 8.00 மணியளவில் ஸ்ரீ சூக்த ஹோமம், புருஷ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.