நீங்காத செல்வம் தரும் வைகுண்ட ஏகாதசி!
வைகுண்ட ஏகாதசி புண்ணிய தினமாகும். ஒரு வருடத்தில் இருபத்திநான்கு அல்லது இருபத்திஐந்து ஏகாதசிகளில், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பு அதிகம்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, "கீதா ஜயந்தி' என்று கொண்டாடுகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ ரங்கம் ரங்கநாத ஸ்வாமி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ பெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைஷ்னவ திவ்ய தேசங்களிலும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
அதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி திருக்கோயில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் போன்ற வைஷ்னவ ஸ்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
விஷ்ணுவுக்கு உகந்த ஏகாதசி திதி
ஓருமுறை மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசியன்று, வைகுண்டம் சென்று நாராயணனை வணங்கி தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைக் கூறினார்கள் பிரம்மா மற்றும் தேவர்கள். எம்பெருமானும் அவர்களுக்கு தரிசனமளித்து அவர்களின் துன்பங்களை போக்கினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்தது இந்த 'ஏகாதசி திதி' ஆகும். அசுவமேத யாகத்திற்கு நிகரான ஏகாதசி விரதத்தை நாம் கடைப்பிடித்தால், நம்முடைய சகல பாவங்ளும் நீங்கும்.
கோரிக்கை ஏற்ற கோபாலன்
ஒரு சமயம் பிரளயம் ஏற்பட, அதில் மூழ்கிய பூலோகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பி, திருமால் நான்முகனைப் படைத்தார். நான்முகனை அழிக்க தோன்றிய மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்களையும், தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். திருமாலின் கையால் மோட்சம் பெற்ற அவர்கள் திருமாலிடம் "நாங்கள் உம் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்" என்று மன்றாடினார்கள். அந்த வேண்டுகோளை ஏற்று திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார்.
மார்கழி மாத ஏகாதசி
அப்போது அந்த அசுரர்கள் "மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் பின்பற்ற வேண்டும். அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கும் ஆசி வழங்கினார். அந்த திருநாள் தான் வைகுண்ட ஏகாதசித் திருநாளாக வைணவத் திருத்தலங்களில் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
ஏகாதசி விரதம் இருக்கும் முறை:
1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.
2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்க்கொள்ள வேண்டும்.
3. ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் .ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம் . ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.
4. இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது. .
5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் உணவு அருந்துவதை பாரணை என அழைக்கிறோம். துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை_கூறி வாழை இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி வறுத்த சுண்டைக்காய் சாம்பார் ஆகியவை முக்கியமானவை.
6.துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப்தேன்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.
7.உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங் களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
நன்மைகள் ஏற்படும்
ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும். எனவே வைகுண்ட ஏகாதசி தினமான நாளை விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயனம் செய்து அந்த பரந்தாமனின் அருளை திருப்பாவையின் "நீங்காத செல்வம் நிறைந்தேலொ ரெம்பாவை" என்பதற்கிணங்க நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக!