வைகுண்ட ஏகாதசி விழா ஶ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது - பக்தர்கள் தரிசனம்
ஶ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது.
திருச்சி: பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முதல்நாளான நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பக்தர்கள் ரங்கா ரங்கா என முழக்கமிட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அளித்த நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதத்தில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அருளிய திருப்பாவையையும், மாணிக்க வாசகர் அருளிய திருவெண்பாவையும் பாடி கன்னிப்பெண்கள் நோன்பு இருப்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிடித்தமான மாதமும் மார்கழி மாதம் தான். அதனால் தான் மாதங்களில் நான் மார்கழி என்று அருளியிருக்கிறார்.
இதன் காரணமாகவே, வைணவ பக்தர்கள் மட்டுமல்லாமல், இந்துக்கள் அனைவரும் போற்றி வணங்கும் மிகப் புனிதமான மாதமாக மார்கழி மாதம் உள்ளது. இந்த மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருநாளும், சிவ பக்தர்களுக்கு உகந்த நாளான திருவாதிரை திருநாளும் வருகிறது.
சனிப்பெயர்ச்சி : 2020ல் யாருக்கு ஏழரை சனி தொடங்குது யாருக்கு ஏழரை சனி முடியுது - பரிகாரங்கள்
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி
வைணவ பக்தர்களின் திருவிழாக்களிலேயே மிகப்பெரிய திருவிழாவாக வைகுண்ட ஏகாதசி திருவிழா அனைத்து வைணவ ஆலயங்களில், ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவானது மார்கழி மாதத்தில் 21 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். முதல் பத்து நாள்கள் பகல் பத்து எனவும், வைகுண்ட ஏகாதசி திருநாள் முடிந்த பின்பு 10 நாள்கள் இராப்பத்து எனவும் கொண்டாடப்படுவது மரபு.
ஸ்ரீரங்கநாதர் தரிசனம்
பூலோக சொர்க்கம் என்றும், 108 வைணவ ஆலயங்களில் முதன்மையானதாகவும், பெரிய கோயில் என்றும் வைணவ பக்தர்களால் பயபக்தியுடன் போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.இங்கு நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் புகழ்பெற்றவையாக இருந்தாலும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காகவே உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வைகுண்ட வாசனாகிய ஸ்ரீரங்கநாதரை தரிசித்துச் செல்வது வழக்கம்.
பக்தர்கள் தரிசனம்
இந்த ஆண்டு பகல் பத்து விழா வியாழக்கிழமை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை பகல் பத்து திருவிழா தொடங்கியது,மூலஸ்தானத்திலிருந்து காலை 7 மணிக்கு ரங்கநாதர் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அளித்தார். நம்பெருமாள் நீள்முடி கிரீடம், வைர அபயஹஸ்தம், பவள மாலை சூரிய பதக்கம் அலங்காரத்தில் காட்சி அளித்தார் அரையர் சேவை பொது ஜன சேவை நடைபெறுகிறது.
வைகுண்ட வாசல் திறப்பு
ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறும். பின்னர் பகல் பத்து திருவிழாவின் கடைசி நாளில், நம்பெருமாளாகிய ஸ்ரீரங்கநாதர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். பின்னர், இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான ஜனவரி 6ஆம் தேதியன்று, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
ராப்பத்து திருவிழா
இதனையடுத்து, இராப்பத்து நாட்களின் போது, தினந்தோறும், நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில், அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களுடன் சேவை சாத்தும் வைபம் நடைபெறும். அந்த நாட்களில் திருவாய்மொழி பாசுரங்களும் அபிநயம், வியாக்யானங்களுடன் அரையர்களால் சேவிக்கப்படும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயிலின் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.